பெருந்துறை அருகே சரக்கு ஆட்டோ- கார் மோதல்: டிரைவர்கள் 2 பேர் பலி

பெருந்துறை அருகே, சரக்கு ஆட்டோ மற்றும் கார் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், டிரைவர்கள் 2 பேர் இறந்தனர்.

Update: 2021-10-31 23:45 GMT

விபத்தில்  நொறுங்கிய கார். 

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள திங்களூர் சுப்பையான்பாளையத்தை சேர்ந்தவர் ஜெகன்குமார். இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவியும், சிவசபரி என்ற மகனும், சுஜயா ஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். ஜெகன்குமார்,  வாடகை கார் டிரைவராக வேலை செய்து வந்தார்.

நேற்று,  ஜெகன்குமார் தனது நண்பர்களான வேலுமணி, தமிழ்செல்வன், சுரேஷ் ஆகியோருடன் கோபியில் இருந்து திங்களூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.திங்களூர் அருகே சென்றபோது எதிரே வந்த தனியார் நிறுவன சரக்கு ஆட்டோவும், காரும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் சரக்கு ஆட்டோவின் டிரைவரான புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை சேர்ந்த கலியபெருமாள் என்பவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

காரின் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி ஜெகன்குமார், வேலுமணி, தமிழ்செல்வன், சுரேஷ் ஆகியோர் காயம் அடைந்தனர். இதை கண்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று 4 பேரையும் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஜெகன்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திங்களூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News