புனித வெள்ளியையொட்டி ஈரோட்டில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

புனித வெள்ளியையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தைகள் நடைபெற்றன.

Update: 2024-03-29 14:06 GMT

அந்தியூர் அருகே உள்ள நகலூரில் புனித வெள்ளியையொட்டி, சிலுவைப்பாதை ஊர்வலம் நடைபெற்றது.

புனித வெள்ளியையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்றன.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட தினம் புனித வெள்ளியாக கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு கிறிஸ்தவர்களின் தவக்காலம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த பிப்ரவரி 14ம் தேதியன்று சாம்பல் புதன் முதல் கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது.

அதன் தொடர்ச்சியாக கடந்த 24ம் தேதி குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது. தொடர்ந்து, பரிசுத்த வாரம் கடைபிடிக்கப்பட்டது. பரிசுத்த வாரத்தில் நேற்று பெரிய வியாழன் அனுசரிக்கப்பட்டது. அதையொட்டி, இரவு புனித அமல அன்னை ஆலயம், சி.எஸ்.ஐ. தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்றன.

தொடர்ந்து, இன்று (வெள்ளிக்கிழமை) புனித வெள்ளியை முன்னிட்டு தேவாலயங்களில் காலை 6 மணி முதல் 11 மணி வரை மவுன ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து இயேசுவின் சிலுவைப்பாடுகளை நினைவுகூர்ந்து சிலுவைப்பாதை வழிபாடு நடைபெற்றது. பிற்பகல் 3 மணிக்கு இறை இரக்கநாள் பிரார்த்தனையும், தொடர்ந்து திருச்சிலுவை வழிபாடும் நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

இதைத்தொடர்ந்து, நாளை (30ம் தேதி) இரவு 10.30 மணிக்கு பாஸ்கா திருவிழிப்பு வழிபாடு, பிரார்த்தனை தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து, இயேசு கிறிஸ்து உயிர்த்து எழுந்த உயிர்ப்பு பெருவிழா (ஈஸ்டர் பண்டிகை) சிறப்பு திருப்பலி நள்ளிரவு நடைபெறுகிறது. அதன் பின்னர், நாளை மறு நாள் (31ம் தேதி) அதிகாலை 5 மணிக்கு உயிர்த்த ஞாயிறு சிறப்பு பிரார்த்தனை நடைபெறவுள்ளது.

Tags:    

Similar News