பெட்ரோல் குண்டு வீசி நாடகம்.. கோபியில் மோடி பாசறை நிர்வாகி கைது...

கோபிசெட்டிபாளையம் அருகே மனைவி மற்றும் உறவினர்களை பழிவாங்க பெட்ரோல் குண்டு வீசி நாடகமாடிய மோடி பாசறை நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

Update: 2023-01-23 13:45 GMT

கோபிசெட்டிப்பாளையம் அருகே கைது செய்யப்பட்ட சண்முகம்.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கூகலூர் பேரூராட்சிக்குட்பட்ட கணபதிபாளையம் மாணுவக்காடு போயர் காலனியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 43). விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு அய்யம்மாள் (39) என்ற மனைவியும், விக்னேஷ் (15), அடல் பிகாரி வாஜ்பாய் (13), ராஜேஶ் (10) என்ற மகன்களும் உள்ளனர்.

சண்முகம் தேவேந்திர குல வேளாளர் மோடி பாசறையின் கோபி சட்ட மன்ற தொகுதி நிர்வாக குழுவில் நிர்வாகியாக உள்ளார். இந்நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் சண்முகத்திற்கும் அவரது மனைவி அய்யம்மாளுக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்படவே, அய்யம்மாள் கோபியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு மகன்களுடன் சென்று விட்டார்.

இந்நிலையில், சண்முகம் கோபிசெட்டிபாளையம் காவல் நிலையத்தில் இன்று ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில், தான் வீட்டின் முன்பு உள்ள பகுதியில் தூக்கிக் கொண்டு இருந்தாகவும், அப்போது ஏதோ ஒரு பொருள் விழும் சத்தம் கேட்டு எழுந்து பார்த்தபோது வீட்டின் வெளிபகுதியில் தீப்பற்றி எரிவது கண்டு அதிர்ச்சியடைந்ததாகவும் சண்முகம் தெரிவித்துள்ளார்.

மேலும், வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தபோது, நீட்டின் முன்பகுதியில் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில் தீப்பற்றி எரிந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்ததாகவும் புகார் மனுவில் சண்முகம் தெரிவித்துள்ளார். சண்முகம் அளித்த தகவலின் பேரில் கோபி காவல் ஆய்வாளர் சண்முகவேலு மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அங்கு எரியாமல் கிடந்த பெட்ரோல் குண்டை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும், மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் நீலகண்டன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், மனைவி மற்றும் மனைவின் உறவினர்களை பழிவாங்க சண்முகமே பெட்ரோல் குண்டு வீசி நாடகமாடியது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் சண்முகத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News