ஆன்லைனில் தேர்வு நடத்த கோரி கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்

மொடக்குறிச்சி அருகே ஆன்லைனில் தேர்வு நடத்தகோரி கல்லூரி, மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-11-16 11:00 GMT

மொடக்குறிச்சி அடுத்த எழுமாத்தூர் அரசு கலை அறிவியல்  கல்லூரியில் சுமார் 2 ஆயிரம் மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். கொரோனா ஊரடங்கையொட்டி கடந்த 2 பருவ தேர்வுகள் ஆன்லைன் மூலம் எழுதி வந்தனர். தற்போது கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படுவதால் ஆன்லைன் தேர்வு ரத்து செய்யப்பட்டு வழக்கம் போல் தேர்வு நடைபெறும் என அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இன்று காலை எழுமாத்தூர் பஸ் நிறுத்தத்தில் 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ - மாணவிகள் ஆன்லைனில் தேர்வு நடைபெற வேண்டும் என கோரிக்கை வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இது குறித்து மாணவர்கள் கூறியதாவது: கொரோனா ஊரடங்கால் கடந்த 2 ஆண்டுகளாக ஆன்லைன் மூலம் படித்து தேர்வு எழுதி வந்தோம். தற்போது உடனடியாக நேரடியாக தேர்வு எழுத வேண்டும் என்று அறிவிப்பு வந்துள்ளது. இதனால் கடும் மாணவர்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். எனவே எங்களுக்கு இந்த ஒரு முறை ஆன்லைன் மூலம் தேர்வு எழுத அனுமதி அளிக்க வேண்டும். இது குறித்து கல்லூரி முதல்வர் மற்றும் மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்க உள்ளோம் என்று தெரிவித்தனர். 

இதுகுறித்து தகவல் அறிந்து மொடக்குறிச்சி இன்ஸ்பெக்டர் தீபா மற்றும் போலீசார் விரைந்து வந்து மாணவ-மாணவிகள் இடையே பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கோரிக்கை குறித்து கல்லூரி முதல்வர் மற்றும் பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று என் கூறியதை அடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர். இதனால் சுமார் அரை மணி நேரம் ஈரோடு-முத்தூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News