அந்தியூர் அருகே இடி தாக்கி 2 கூரை வீடுகள் தீக்கிரை

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே சனிக்கிழமை (நேற்று) மாலை இடி தாக்கியதில் 2 கூரை வீடுகள் தீக்கிரையானது‌.

Update: 2024-06-02 01:30 GMT

இடி தாக்கியதில் தீப்பிடித்து எரிந்து சேதமான கூரை வீடுகளை அந்தியூர் வட்டாட்சியர் கவியரசு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட போது எடுத்த படம்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே சனிக்கிழமை (நேற்று) மாலை இடி தாக்கியதில் 2 கூரை வீடுகள் தீக்கிரையானது‌. 

ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை (நேற்று) மாலை இடி, மின்னலுடன் சாரல் மழை பெய்தது. இந்நிலையில், பச்சாம்பாளையம் புதூர் பகுதியில் பெய்த மழையின் போது இடி தாக்கி அந்த பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (வயது 32), சிவக்குமார் (வயது 30) ஆகியோரின் கூரை வீடுகள் தீப்பிடித்து எரிந்தது.


இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப் பகுதி மக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். இதனையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அந்தியூர் தீயணைப்பு நிலைய வீரா்கள் தீ மேலும் பரவாமல் அணைத்தனா்.‌ எனினும், 2 கூரை வீடுகள் முழுவதும் எரிந்து சேதமானது. மேலும் வீட்டில் இருந்த டிவி, பீரோ, உணவுப்பொருட்கள் மற்றும் ரொக்கம் எரிந்து சேதமானது.

அதனைத் தொடர்ந்து, அந்தியூர் வட்டாட்சியர் கவியரசு, நில வருவாய் ஆய்வாளர் சுதாகர், பச்சாம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் முருகானந்தம் ஆகியோா், எரிந்து போன கூரை வீடுகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு இடைக்கால நிவாரண உதவி வழங்கினர். மேலும், இதுகுறித்து அந்தியூர் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News