பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 6 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து வியாழக்கிழமை (மே.23) இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 6,672 கன அடியாக அதிகரித்துள்ளது.

Update: 2024-05-23 02:45 GMT

பவானிசாகர் அணை.

பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து வியாழக்கிழமை (மே.23) இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 6,672 கன அடியாக அதிகரித்துள்ளது.

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவு கொண்டது. இந்த அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. இந்நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மேலும், பில்லூர் அணையில் இருந்து நேற்று மாலை முதல் பவானி ஆற்றில் 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதால் பவானி ஆறு மற்றும் மாயாற்றில் நீர்வரத்து வெகுவாக அதிகரித்துள்ளது. அணைக்கு நீர்வரத்து நேற்று (மே.22) புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,362 கன அடியாக இருந்த நிலையில், இன்று (மே.23) வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 6,672 கன அடியாக அதிகரித்துள்ளது. 

இதனிடையே, மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால், அணையில் இருந்து பவானி ஆற்றில் குடிநீர் தேவைக்கு திறக்கப்பட்ட தண்ணீர் இன்று காலை முதல் நிறுத்தப்பட்டுள்ளது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் மட்டும் வினாடிக்கு 5 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் நேற்று காலை 46.19 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 47.45 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் நீர் இருப்பு 3.84 டிஎம்சியாக உள்ளது. மேலும், பவானிசாகர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் 66.4 மி.மீ மழை பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News