ஈரோட்டில் காதில் பூ வைத்து நூதனமான முறையில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோட்டில் இன்று ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் நூதன முறையில் காதில் பூ வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-09-25 12:15 GMT

ஈரோடு காளைமாட்டு சிலை அருகில் காதில் பூ வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள்.

ஈரோட்டில் இன்று ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் நூதன முறையில் காதில் பூ வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பள்ளி கல்வித்துறையில் ஆசிரியர்கள் தகுதித்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில், ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நியமன தேர்வு நடத்தப்படும் என அரசு அறிவித்தது.

இதனால், கடந்த 2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இதுவரை ஆசிரியர் பணியிடங்கள் ஒதுக்கப்படாத நிலையில், இந்த நியமன தேர்வு முறையை கைவிட வலியுறுத்தி ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் கடந்த 11 வருடங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான நியமன தேர்வு அரசாணை 149ஐ ரத்து செய்து, திமுக தேர்தல் வாக்குறுதியில் அளித்த 177ஐ நடைமுறைப்படுத்தக்கோரி தமிழகத்தில் மண்டல வாரியாக ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, இன்று (25ம் தேதி) ஈரோட்டில் காளைமாட்டு சிலை அருகில் ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் காதுகளில் பூ வைத்து நூதன முறையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் வாழ்வாதாரத்தை காக்க நியமன தேர்வு முறை ரத்து செய்ய வேண்டும்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்காக அறிவித்த அரசாணை 177ஐ நிறைவேற்ற வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். 

Tags:    

Similar News