ஈரோட்டில் டிச.16ம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

ஈரோடு ரங்கம்பாளையத்தில் வரும் டிச.16ம் தேதி மாவட்ட நிர்வாகம் சார்பில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

Update: 2023-12-11 12:15 GMT

தமிழ்நாடு தனியார்துறை வேலைவாய்ப்பு இணையதள முகப்பு.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஒட்டி, ஈரோடு ரங்கம்பாளையத்தில் வரும் டிச.16ம் தேதி மாவட்ட நிர்வாகம் சார்பில், மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஈரோடு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் டிசம்பர் 16ம் தேதி ஈரோடு மாவட்டம், ரங்கம்பாளையத்தில் உள்ள டாக்டர் ஆர்ஏஎன்எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.

இம்முகாமில் 200க்கும் மேற்பட்ட ஈரோடு, திருப்பூர், கோவை, சேலம், சென்னை, கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் பங்கேற்று 10,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களைத் தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசமானதாகும். எனவே, ஈரோடு மாவட்டத்தில் தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ள அனைவரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம்.

இம்முகாமின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார் துறையில் பணியமர்த்தம் செய்யப்படும் வேலைநாடுநர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் இரத்து செய்யப்படமாட்டாது. மேலும் விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது தொலைபேசி எண் 8675412356, 9499055942 வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம். இம்முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் கட்டாயம் முன்பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News