புஷ்பா பட பாணியில் சரக்கு வாகனத்தில் ரகசிய அறை அமைத்து கடத்தப்பட்ட குட்கா

அந்தியூரில் புஷ்பா படம் பாணியில் சரக்கு வாகனத்தில் ரகசிய அறை அமைத்து கடத்தி வந்த குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2024-10-14 11:30 GMT

பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்கள்.

அந்தியூரில் புஷ்பா திரைப்படப் பாணியில் சரக்கு வாகனத்தில் ரகசிய அறை அமைத்துக் கடத்தி வரப்பட்ட 1,550 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோயில் ரவுண்டானாவில் இன்று (14ம் தேதி) காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு ஒன்று நிற்காமல் சென்றது.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் நிற்காமல் சென்ற வாகனத்தை அந்தியூர் - அத்தாணி சாலையில் தோப்பூரில் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். சோதனையில், வாகனத்தில் சரக்குகள் ஏதும் இல்லாத நிலையில், உடனே ஓட்டுநர் மற்றும் உதவியாளர் தப்பி ஓடிவிட்டனர்.

தொடர்ந்து, போலீசார் சந்தேகமடைந்து சோதனை செய்ததில், புஷ்பா திரைப்பட பாணியில் ஓட்டுநரின் இருக்கைக்கு பின்னால் சிறிய ரகசிய வழி இருந்ததையடுத்து, அதில் சென்று பார்த்துள்ளனர். அப்போது, சிறிய அறையில் 148 மூட்டைகளில் ரூ.9 லட்சத்து 79 ஆயிரத்து 200 ரூபாய் மதிப்புள்ள 1,544.760 கிலோ குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. 

இதனையடுத்து, போலீசார் சரக்கு வாகனத்தையும், குட்கா பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.  மேலும், அந்த சரக்கு எங்கிருந்து வந்தது? குட்கா கடத்தியவர்கள் யார்? என்பது இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News