ஈரோடு மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 268 மனுக்கள் பெறப்பட்டன.

Update: 2023-03-20 10:45 GMT

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (மார்ச்.20) திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.


இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, காவல் துறை நடவடிக்கை, கல்விக்கடன், தொழில் கடன், குடிநீர் வசதி, சாலை வசதி, அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 268 மனுக்கள் வரப்பெற்றன.

பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி  உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார்.


மேலும், முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள், அமைச்சர் பெருமக்களின் முகாம் மனுக்கள், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

முன்னதாக மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் மகளிர் வாழ்வாதார சேவை மையம் தொடர்பாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி இச்சேவை மையத்தினை பயன்படுத்திக் கொள்ளுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.


இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) குமரன், துணை ஆட்சியர் (பயிற்சி) காயத்திரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கோதைச்செல்வி உட்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News