கவுந்தப்பாடி: மழையால் மாட்டுத்தொழுவத்தின் சுவர் இடிந்து முதியவர் பலி

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அருகே மழையால், மாட்டுத்தொழுவத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் முதியவர் உயிரிழந்தார்; 3 ஆடுகள் பலியாகின.

Update: 2021-10-03 02:15 GMT

மழையால் தரைமட்டமான மாட்டுத்தொழுவம்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் கவுந்தப்பாடி அருகே மழையால் நனைந்திருந்த மாட்டுத் தொழுவத்தின் சுவர் இடிந்து விழுந்து முதியவர் பலியானார். மேலும் 3 ஆடுகளும் இறந்தன.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: கவுந்தப்பாடி அருகே உள்ள பச்சப்பாளி ஆவாரங்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 68). விவசாயி. இவர் தன்னுடைய வீட்டின் முன்பு சிமெண்டு அட்டையால் வேயப்பட்ட மாட்டுத்தொழுவம் அமைத்து உள்ளார். இந்த மாட்டுத்தொழுவத்தில் 10 ஆடுகள், 2 எருமை மாடு மற்றும் ஒரு எருமை கன்றுக்குட்டி ஆகியவற்றை வளர்த்து வந்தார். இந்த மாட்டுக்கொட்டகையின் ஒருபுறத்தில் 12 உயரத்துக்கு செங்கற்களை கொண்டு மண்ணால் ஆன பழைய சுவர் ஒன்று கட்டப்பட்டுள்ளது.

கவுந்தப்பாடி பகுதியில், கடந்த 2 நாட்களாக பெய்தகனமழையால், இந்த சுவர் நன்றாக நனைந்திருந்தது. நேற்று காலையில் தொழுவத்தை பழனியப்பன் சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது மாட்டுத்தொழுவத்தின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்கிடையே பழனியப்பன் சிக்கி படுகாயம் அடைந்தார். இதை கண்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று அவரை மீட்டு கோபி தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பழனியப்பன் பரிதாபமாக இறந்தார்.

மேலும் மாட்டுத்தொழுவம் இடிந்து விழுந்ததில் 3 ஆடுகளும் இறந்தன. அதுமட்டுமன்றி இடிபாடுகளுக்கு இடையே சிக்கி ஒரு எருமை கன்றுக்குட்டி மற்றும் 2 ஆடுகள் படுகாயம் அடைந்தன. கவுந்தப்பாடி போலீசார் விரைந்து சென்று பழனியப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபாஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மாட்டுத்தொழுவம் இடிந்து விழுந்து முதியவர் பலியானது, அப்பகுதியில் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Tags:    

Similar News