கோபி: போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவர் கைது

கோபிசெட்டிபாளையம் அடுத்த பங்களாப்புதூர் அருகே நாட்டுவெடியை வீசி கொன்று விடுவோம் என போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-06-12 11:45 GMT

பைல் படம்

ஈரோடு மாவட்டம் பங்களாப்புதூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட டி.என்.பாளையம், வாணிப்புத்தூர்,காளியூர் மற்றும் கெம்மநாயக்கன்பாளையம் ஆகிய இடங்களில் காவல் உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ் மற்றும் காவலர்கள் ரோந்து சென்றனர்.

அப்போது டி.ஜி.புதூர்-கெம்மநாயக்கன்பாளையம் சாலையில் உள்ள காளியூர் பிரிவு பேருந்து நிறுத்தம் பகுதியில் சென்றபோது, அதே பகுதியை சேர்ந்த வேட்டையன் (50) மற்றும்நாராயணன் (58) ஆகிய இருவரும் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினர்.

இதையடுத்து காவல்துறையினர் அவர்களை விரட்டி பிடிக்க முயன்றபோது இருவரும் அருகில் வந்தால் நாட்டு வெடியை வீசி கொன்று விடுவோம் என்று காவல்துறையினரை பார்த்து மிரட்டினர்.

இதையடுத்து காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து கைது செய்து விசாரித்தபோது, இருவரும் வனப்பகுதியில் இருந்து வரும் விலங்குகளை விரட்டவும், காட்டு பன்றிகளை வேட்டையாடுவதற்கும் அவுட்காய்கள் எனப்படும் நாட்டுக்காயை வைத்திருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து காவல்துறையினர் அவர்கள் மீது கொலை மிரட்டல், வெடிபொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து, நான்கு அவுட்காய்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News