காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கவுந்தப்பாடி காந்தி கோவிலில் சிறப்பு வழிபாடு

தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, கவுந்தப்பாடி காந்தி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Update: 2021-10-03 01:45 GMT

கவுந்தப்பாடி காந்தி கோவிலில் நடைபெற்ற, சிறப்பு வழிபாடு.

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் கவுந்தப்பாடி அருகே, சலங்கபாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட செந்தாம்பாளையத்தில் கடந்த 1997-ம் ஆண்டு,  ஊர் பொதுமக்கள் மற்றும் மகாத்மா காந்தி அறக்கட்டளை தலைவர் எஸ்.வி.வையாபுரி மற்றும் உறுப்பினர்கள் சார்பில், காந்திக்கு கோவில் கட்டப்பட்டது.

இங்கு காந்தி மற்றும் கஸ்தூரிபா காந்திக்கு, தனித்தனி சிலைகள் உள்ளன. இந்த கோவிலில் தினமும் 3 கால பூஜை நடைபெற்று வருகிறது. மேலும் காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2-ந் தேதி அன்று,  ஒவ்வொரு ஆண்டும் பெருந்தலையூர் பவானி ஆற்றில் இருந்து புனிதநீர் கொண்டு வரப்பட்டு தேன், பால், பஞ்சாமிர்தம், பன்னீர், இளநீர், திருமஞ்சனம், தயிர் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு மகாத்மா காந்திக்கும், கஸ்தூரிபா காந்திக்கும் அபிஷேக ஆராதனை, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, காந்தி ஜெயந்தியையொட்டி, நேற்று இந்த கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. முன்னதாக பொதுமக்கள் பவானி ஆற்றில் இருந்து புனிதநீர் கொண்டு வந்தார்கள். அதைக்கொண்டு மகாத்மா காந்தி, கஸ்தூரிபா காந்தி சிலைக்கு அபிேஷகம் நடத்தி, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் உள்ளூர் மக்கள், சமூக இடைவெளியை கடைபிடித்து பங்கேற்றனர்.

Tags:    

Similar News