ஈரோட்டில் ஊரடங்கை மீறியதாக 302 வாகனங்கள் பறிமுதல் : ரூ.2.47 லட்சம் அபராதம்

ஈரோட்டில் ஊரடங்கை மீறியதாக 302 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.2.47 லட்சம் அபராதம் விதிப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Update: 2021-06-20 09:15 GMT

ஈரோட்டில் ஊரடங்கையொட்டி வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள போலீசார்.

தமிழகத்தில் கொரோனா 2 -வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த நாளை வரை தளர்வுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கை மீறி வெளியே சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தெரிவித்திருந்தார். அதன்படி ஈரோடு, கோபிச்செட்டிபாளையம், சத்தியமங்கலம்,பவானி, உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இருப்பினும் ஊரடங்கை பொருட்படுத்தாமல் வழக்கம் போல் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் ஏராளமானோர் சுற்றி திரிகின்றனர். 27-வது நாளான நேற்றும் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். நேற்று மட்டும் முக கவசம் அணியாமல் வந்த 230 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தலா ரூ.500 அபராதம் விதிக்கபட்டது. ஊரடங்கு தடையை மீறி சுற்றியதாக 342 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் 285 இருசக்கரவாகனங்களும், 17 நான்கு சக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.நேற்று மட்டும் ரூ.2 லட்சத்து 47 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News