ஆள்மாறாட்டம் செய்து அரசு பேருந்து இயக்கிய டிரைவர் பணியிடை நீக்கம்
ஆள் மாறாட்டம் செய்து அரசு பஸ்சை இயக்கிய கோபிச்செட்டிபாளையம் கிளை டிரைவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
ஈரோடு மாவட்டம் கோபியிலிருந்து திருச்செந்தூருக்கு தினமும் அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் பஸ்சை கோபி கிளையைச் சேர்ந்த பாலகுமார் என்பவரை டிரைவராக நியமித்து இயக்க அறிவுறுத்தப்பட்டது.
கோபியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் ஒட்டன் சத்திரம் அருகே பஸ் சென்றபோது அரசு பஸ் பறக்கும் படை அதிகாரிகள் பஸ்சை நிறுத்தி சோதனை செய்தபோது பஸ்சை ஓட்டும் பொறுப்பிலிருந்த பாலகுமார் பஸ்சை இயக்காமல், வேறு ஒரு நபர் ஓட்டி வந்ததை அதிகாரிகள் உறுதி செய்தனர்.இதையடுத்து ஆள்மாறாட்டம் செய்து வேறு ஒரு நபரால் பஸ்சை இயக்கிய பாலகுமார்(48) மீது பறக்கும் படை அதிகாரிகள் கோவை நிர்வாக இயக்குநருக்கு அறிக்கை அளித்தனர்.
அதன் அடிப்படையில், அரசு பஸ்சை ஆள்மாறாட்டம் செய்து ஓட்டிய பாலகுமார் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும், இவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.இவர் ஆளும் கட்சியின் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் கோபி கிளையில் முக்கிய பொறுப்பில் இருந்த போதிலும், பாரபட்சமின்றி அவர் மீது நடவடிக்கை எடுத்த அதிகாரிகளை அனைத்து தரப்பினரும் பாராட்டினர்.