கோபிசெட்டிபாளையம் அருகே தோப்பில் பாக்குகளை திருடிய 5 பேர் கைது

டி.என்.பாளையம் அருகே தோப்பில் பாக்கு காய்கள் திருடி கைதான 5 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Update: 2021-11-22 09:00 GMT

பாக்கு காய்களை திருடியதாக கைது செய்யப்பட்ட 5 பேர்.

ஈரோடு மாவட்டம், டி.என். பாளையம் அருகே உள்ள மோதூர் பனங்காட்டு பள்ளம் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி இவருக்கு அந்த பகுதியில் பாக்கு தோட்டம் உள்ளது.

இந்த பாக்கு தோட்டத்தில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. அப்போது மூர்த்தி அங்கு வந்து பார்த்த போது அங்கு 4 பேர் பாக்கு காய்களை பறித்து மூட் டைகளில் போட்டு கொண்டு இருந்தனர். அவர்கள் 8 மூட்டைகளில் பாக்குகளை நிரப்பி வைத்திருந்தனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மூர்த்தி சத்தம் போட்டு கொண்டு அவர்களை பிடிக்க முயன்றார்.அவர்கள் அந்த பாக்கு மூட்டைகளை கொள்ளை அடித்து கொண்டு சரக்கு வேனில் தப்பி ஓடி விட்டனர்.

இதில் ஒருவர் மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டு விட்டு சென்று விட்டார். இது குறித்து பங்களாப்புதூர் போலீசில் மூர்த்தி புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் விட்டு சென்ற மோட்டார் சைக்கிளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இதில் அந்தியூர் மாத்தூர் பகுதியை சேர்ந்த முருகேசன் ( வயது 48), கார்த்தி (வயது 28), முருகன் (வயது 48), அந்தியூர் சந்திபாளையம் பகுதியை சேர்ந்த வடிவேல் (வயது 40) மற்றும் எண்ணமங்கலம் பகுதியை சேர்ந்த சிலம்பரசன் (வயது 28) ஆகியோர் பாக்கு காய்களை திருடியது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 5 பேரை பங்களாப்புதூர் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். நீதிபதி விசாரணை நடத்தி அவர்களை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் 5 பேரும் ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News