ஈரோட்டில் ஒரே நாளில் ஊரடங்கை மீறிய 243 வாகனங்கள் பறிமுதல் - ரூ.1.87 லட்சம் அபராதம்

ஈரோட்டில் ஊரடங்கை மீறியதாக 243 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.1.87 லட்சம் அபராதம் விதிப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்

Update: 2021-06-24 11:15 GMT

தமிழகத்தில் கொரோனா 2 -வது அலையை கட்டுப்படுத்த,  வரும் ஜூன் 28 -ந் தேதி வரை தளர்வு உடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கை மீறி வெளியே சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தெரிவித்திருந்தார்.

இருப்பினும் ஊரடங்கை பொருட்படுத்தாமல் வழக்கம் போல் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் ஏராளமானோர் சுற்றி திரிகின்றனர். 30-வது நாளான நேற்றும், ஈரோடு மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இதில், நேற்று மட்டும் முகக்கவசம் அணியாமல் வந்த 264பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. ஊரடங்கு தடையை மீறி சுற்றியதாக 267 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

மேலும் 232 இருசக்கரவாகனங்களும், 11 நான்கு சக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். நேற்று மட்டும் ரூ.1 லட்சத்து 87 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். வாகனங்களில் வெளியே சுற்றுபவர்களை போலீசார் நிறுத்தி விசாரிக்கும்போது, பெரும்பாலானோர் மருத்துவ காரணங்களுக்காக வெளியே செல்வதாக கூறுவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News