பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கொடிவேரி தடுப்பணை இன்று மூடல்

கொடிவேரி பகுதியில் நேற்றிரவு பெய்த கனமழையின் காரணமாக, பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கொடிவேரி தடுப்பணை இன்று மூடப்பட்டது.

Update: 2024-05-23 03:15 GMT

கொடிவேரி தடுப்பணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் காட்சியை படத்தில் காணலாம்.

கொடிவேரி பகுதியில் நேற்றிரவு பெய்த கனமழையின் காரணமாக, பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கொடிவேரி தடுப்பணை இன்று மூடப்பட்டது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பவானி ஆற்றின் குறுக்கே கொடிவேரி தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இந்த தடுப்பணையின் பாறைகளில் இருந்து அருவி போல் தண்ணீர் கொட்டுவதால், அதில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தடுப்பணைக்கு வந்து செல்வது வழக்கம்.


இந்நிலையில், பவானி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளான சத்தியமங்கலம், பவானிசாகர், கொடிவேரி உள்ளிட்ட பகுதியில் நேற்று இரவு முழுவதும் கனமழை பெய்ததால், கொடிவேரி தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், தடுப்பணையில் இரு கரைகளையும் தொட்டப்படி தண்ணீர் பெருக்கெடுத்து ஆர்ப்பரித்து செல்கிறது. மேலும், தடுப்பணையில் பாதுகாப்பு கம்பியை தாண்டி தண்ணீர் வெளியேறுகிறது.

இதன் காரணமாக, இன்று (மே.23) வியாழக்கிழமை கொடிவேரி அணை மூடப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கும், பரிசல் இயக்கவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். இதனால், ஏமாற்றமடைந்த சுற்றுலாப் பயணிகள் கொடிவேரி தடுப்பணையில் இருந்து அருவி போல் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதை, அணையின் முன்பு உள்ள பாலத்தின் மீது நின்று பார்த்து செல்கின்றனர்.

Tags:    

Similar News