அரசு அலுவலகத்தில் பெண்களை போட்டோ எடுத்து டுவிட்டரில் பதிவிட்ட அதிகாரி கைது

ஈரோடு ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் பெண் ஊழியர்களை போட்டோ எடுத்து டுவிட்டரில் பதிவிட்ட அதிகாரியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Update: 2021-09-20 10:45 GMT

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் சிவகிரி கொல்லாங்கோவில் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 33). திருமணமானவர். இவர் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் 5-வது மாடியில் இயங்கும் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தின் சீனியர் வருவாய் ஆய்வாளராக கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் சதீஷ்குமார் அலுவலகத்தில் தன்னுடன் வேலை பார்க்கும் பெண் ஊழியர்களை அவர்களுக்கு தெரியாமல் செல்போனில் படம் பிடித்து அதை டுவிட்டரில் பதிவேற்றி வந்துள்ளார். இதனை பார்த்த சம்பந்தப்பட்ட பெண் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதில் பாதிக்கப்பட்ட ஒரு பெண் ஊழியரின் பெற்றோர் இதுகுறித்து ஈரோடு சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். புகாரின்பேரில் ஈரோடு சைபர் கிரைம் போலீசார் சதீஷ்குமாரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் சதீஷ்குமார் பெண் ஊழியர்களை அவர்களுக்கு தெரியாமல் செல்போனில் படம் பிடித்து டுவிட்டரில் பதிவேற்றம் செய்தது உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து சைபர் கிரைம் போலீசார் தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துவது, பெண்களை இழிவுபடுத்தும் வகையில் செயல்படுவது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News