இரவு நேர ஊரடங்கு : 15ஆயிரம் தொழிலாளர் வேலை இழக்கும் அபாயம்..!

விசைத்தறியில் இரவு நேர உற்பத்தி நிறுத்தம் காரணமாக, ஈரோட்டில் 15 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்.

Update: 2021-04-21 11:49 GMT

ஈரோடு, வீரப்பன்சத்திரம், சித்தோடு, லக்காபுரம், சோலார், அசோகபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன. நாள் ஒன்றுக்கு 24 லட்சம் மீட்டர் ரயான் துணி உற்பத்தி செய்யப்பட்டு மராட்டியம், மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், டெல்லி, கொல்கத்தா உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பபட்டு வருகின்றது.

இந்தநிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருவதால் வெளி மாநிலங்களில் இருந்து ஈரோடு பகுதிக்கு ஆர்டர் கிடைப்பது பாதிக்கப்பட்டுள்ளதாக விசைத்தறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் கடந்த 15 நாட்களாக வெளிமாநிலங்களுக்கு அனுப்ப முடியாமல் ரூ.100 கோடி மதிப்பிலான துணிகள் தேக்கமடைந்துள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. நேற்று இரவு முதல் இந்த ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு இரண்டு ஷிப்டுகள் அடிப்படையில் விசைத்தறிகள் இயக்கப்பட்டு வருகிறது. அதாவது காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை ஒரு ஷிப்டும், இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை ஒரு ஷிப்டு அடிப்படையில் விசைத்தறிகள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 30 ஆயிரம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். இந்நிலையில் இரவு நேர ஊரடங்கு பிறப்பித்துள்ள காரணத்தால் ஈரோடு மாவட்டத்தில் விசைத்தறி உற்பத்தியை 50 சதவீதமாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நேற்று இரவு நேர ஷிட்டு இயக்கப்படவில்லை. இன்று காலை நேர ஷிப்டு மட்டுமே விசைத்தறிகள் இயக்கப்பட்டன. இதனால் நாளொன்றுக்கு 24 லட்சம் மீட்டர் துணிகள் உற்பத்தியாகும் இடத்தில் இனி 12 லட்சம் மீட்டர் துணிகள் மட்டுமே உற்பத்தி ஆகும். இதன் மூலம் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை வாய்ப்புகளை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News