ஈரோடு மாவட்டத்தில் 847 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்: ஆட்சியர் துவக்கிவைப்பு

ஈரோட்டில் மெகா தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி மற்றும் கண்காணிப்பு அலுவலர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

Update: 2021-09-12 06:30 GMT

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மெகா தடுப்பூசி முகாமினை துவக்கிவைத்த மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி மற்றும் கண்காணிப்பு அலுவலர் தட்சிணாமூர்த்தி.

கொரோனாவில் பெருந்தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்தியாவில் பெரும்பாலான மக்களுக்கு கோவேக்சின், கோவிஷில்டு ஆகிய தடுப்பூசிகள் முதல் டோஸ் மற்றும் இரண்டாம் டோஸ் போடப்பட்டு வருகிறது. அதேபோல் தமிழகத்திலும் தடுப்பூசி போடும் பணி சிறப்பாக நடந்து வருகிறது.

தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதலில் தடுப்பூசி போடுவதில் சுணக்கம் காட்டிய மக்கள், பின்னர் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டு வருகின்றனர். குறிப்பாக தடுப்பூசி மையங்களில் இரவுலேயே வந்து காத்திருந்து காலையில் வரிசையில் நின்று தடுப்பூசி போட்டுக்கொண்டு  செல்கின்றனர்.

இந்நிலையில் தடுப்பூசி போடுவதை ஊக்கப்படுத்தும் வகையில் இன்று தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்து இருந்தனர். அதன் படி இன்று தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

அதேபோல் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் மற்றும் கண்காணிப்பு அலுவலருமான தட்சிணாமூர்த்தி ஆகியோர் மாபெரும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாமினை தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.

ஈரோடு மாவட்டத்தில் 847 மையங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 400 பேருக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும் இந்த முகாமினை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News