வாழ்வாதாரம் காக்க வலியுறுத்தி முடி திருத்துவோர் முறையீடு

கொரோனாவால் முடங்கிய தங்களின் வாழ்வாதாரத்தை காக்க வலியுறுத்தி, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் முடி திருத்துவோர், அழகு கலை நிபுணர்கள் மனு அளித்தனர்.

Update: 2021-04-26 09:05 GMT

தமிழகத்தில் தற்போது கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. இன்று முதல் மேலும் புதிய கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. அதன்படி.  மாநகராட்சி, நகராட்சி பகுதியில் இயங்க கூடிய சலூன்கள், பியூட்டி பார்லர் கடைகளுக்கு இன்று முதல் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், இன்று தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பிலும், ஈரோடு மாவட்ட அழகு கலை நிபுணர்கள் சங்கம் சார்பிலும், நிர்வாகிகள் தொழிலாளர்கள் திரண்டு வந்து நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் தாங்கள் கொண்டு வந்த மனுவை போட்டனர்.

மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: கடந்த வருடம் கொரோனா தாக்கம் காரணமாக, முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் ஆறு மாத காலம் சலூன்கள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் இந்த தொழிலை நம்பி இருந்த ஏராளமான தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர்.

அரசு அறிவித்த 2000 ரூபாய் நிவாரண உதவி கூட ஒரு சிலருக்கு மட்டுமே கிடைத்தது. பெரும்பாலான தொழிலாளர்களுக்கு கிடைக்கவில்லை. சில தொழிலாளர்கள் தற்கொலை கூட செய்து உள்ளனர். இன்னமும் பொருளாதாரத்தில் இருந்து மீளாமல் உள்ளோம்.

இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து உள்ளதால் மாநகராட்சி நகராட்சி பகுதி இயங்கக்கூடிய சலூன்கள் இன்று முதல் அடைக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள எங்களுக்கு இந்த அறிவிப்பு மேலும் ஒரு பேரிடியாக விழுந்துள்ளது. இதனால் மீண்டும் தொழிலாளர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, அரசு இந்த அறிவிப்பை மறுபரிசீலனை செய்து ஈரோடு மாநகராட்சி, பவானி ,கோபி, சத்தியமங்கலம், புஞ்சை புளியம்பட்டி, ஆகிய நகராட்சி பகுதியில் இயங்கக்கூடிய சலூன்களை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளுடன் நாங்கள் பணி செய்ய தயாராக இருக்கிறோம். அப்படி இல்லை என்றால் நேரக் கட்டுப்பாடுகள் விதித்து சலூன் கடை களை தொடர்ந்து இயங்க அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறியுள்ளனர்.

இதேபோல் ஈரோடு மாவட்ட அழகுக்கலை நிபுணர்களும், கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தங்களது வாழ்வாதாரத்தை காக்க வலியுறுத்தியும், மீண்டும் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் பியூட்டி பார்லர்களை இயக்க அனுமதி தர வலியுறுத்தியும் மனு கொடுத்தனர்.

Tags:    

Similar News