ஈரோட்டில் தடுப்பூசி போட்டுக்கொள்ள நீண்ட வரிசையில் காத்திக்கும் மக்கள்

ஈரோடு மாவட்டத்திற்கு 13 ஆயிரத்து 400 கோவிஷில்டு தடுப்பூசிகள் வந்ததையடுத்து அதிகாலை முதலே தடுப்பூசி போட்டுக்கொள்ள நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர்.

Update: 2021-06-13 02:45 GMT

ஈரோட்டில் தடுப்பூசி போட்டுக்கொள்ள நீண்ட வரிசையில் காத்திக்கும் மக்கள்

தமிழகத்திலும் கொரோனா தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த முதற்கட்டமாக கோவேக்சின், கோவிஷில்டு ஆகிய 2 தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்தன. முதலில் முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டன. அதன்பிறகு 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், 45 முதல் 59 வயது உள்ளவர்களுக்கும், பின்னர் 18 வயது முதல் 45 வயது உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

முதலில் தடுப்பூசி பற்றிய அச்சத்தால் பொது மக்கள் பெரும்பாலும் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் கட்டவில்லை. தற்போது கொரோனா 2-ம் அலையால் பாதிப்பு அதிகரித்து உயிரிழப்பும் ஏற்பட்டு வருவதால் மக்களிடையே தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வம் ஏற்பட்டது. இதனால் தடுப்பூசி போட மக்கள் தடுப்பூசி போடும் மையங்களில் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் திடீரென தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தனியார் ஆஸ்பத்திரியில் தடுப்பூசி போடுவது நிறுத்தப்பட்டது. அரசு ஆஸ்பத்திரி ஆரம்ப சுகாதார மையங்களில் மட்டும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஈரோடு மாநகர் பகுதியில் 10 ஆரம்ப சுகாதார மையங்களில் தினமும் 100 பேருக்கு டோக்கன் அடிப்படையில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. தடுப்பூசிகள் தட்டுப்பாடு காரணமாக கடந்த ஒரு வாரமாக மாவட்டத்தில் தடுப்பூசிகள் போடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

தற்போது ஈரோடு மாவட்டத்திற்கு நேற்று 13 ஆயிரத்து 400 கோவிஷில்டு தடுப்பூசிகள் வந்தன. பின்னர்.இந்தத் தடுப்பூசிகள் அந்தந்த தடுப்பூசி போடும் மையங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து இன்று முதல் தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று அதிகாலை முதலே தடுப்பூசி போட்டுக்கொள்ள தடுப்பூசி போடும் இடங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

Tags:    

Similar News