ஓரம்போ... ஓரம்போ நம்மூரு பஸ்சு வருது!ஈரோடு மாவட்டத்தில் இன்று 400 பஸ்கள் இயக்கம்

ஊரடங்கு தளர்வுகள் அறிவிப்பு காரணமாக ஈரோடு மாவட்டத்தில் இன்றுமுதல், 400 பஸ்கள் இயங்குவதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Update: 2021-07-05 01:59 GMT

தமிழ்நாட்டில் உள்ள 27 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வுகளால், கடந்த வாரம் முதல் அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஈரோடு மாவட்டம் உள்பட 11 மாவட்டங்களில் இயக்கப்படாமல் இருந்த பஸ்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு காரணமாக இன்று முதல் போக்குவரத்துக்கழக பஸ்கள் இயங்க தொடங்கின.

இதை முன்னிட்டு நேற்று அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகளில் நிறுத்தப்பட்டு உள்ள பஸ்களை தூய்மை செய்யும் பணிகள் நடைபெற்றது. இதனையடுத்து இன்று காலை  முதல் முதற்கட்டமாக 400 பஸ்களின் இயக்கம் தொடங்கி உள்ளது.

போக்குவரத்து துணைப்பொது மேலாளர் ராமகிருஷ்ணன் கூறியதாவது: ஈரோடு மண்டலத்தில் 13 பணிமனைகளிலிருந்து 728 பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஊரடங்கு தளர்வுகளை அளித்தன் காரணமாக 60 சதவீதம் பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதாவது சுமார் 400 பஸ்கள் வரை ஈரோடு மாவட்டத்தில் இருந்து இயக்கப்படுகிறது. அரசின் வழிகாட்டுதலின்படி பிற மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்படும். ஆனால் பிற மாநிலங்களுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்பட மாட்டாது என்றார். 

அரசு போக்குவரத்துக்கழக நகர பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்ககைளுக்கு இலவச பயணத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த திட்டம் அறிவிக்கப்பட்டு ஓரிரு நாட்கள்தான் பஸ்கள் இயங்கின.

மீண்டும் இன்றுமுதல் பஸ்கள் ஓடத்தொடங்குவதால் இலவச பயணத்திற்கு அனுமதிக்கப்பட்ட பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்ய ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக குறைந்த ஊதியத்தில் பல்வேறு வேலைகளுக்கு சென்று வரும் பெண்கள் உற்சாகமாக இன்று மீண்டும் தங்களது பயணத்தை தொடங்கினர்.

Tags:    

Similar News