ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: தற்போதைய நிலவரப்படி 74.69% வாக்குப்பதிவு

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தற்போது வரை 74.69% வாக்குகள் பதிவாகியுள்ளது.

Update: 2023-02-27 14:15 GMT

வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணி நடைபெற்றது.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தற்போது வரை 74.69% வாக்குகள் பதிவாகியுள்ளது.

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இன்று (பிப்.27) திங்கட்கிழமை இடைத்தேர்தல் நடைபெற்றது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த ஜனவரி மாதம் 31-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 7-ம் தேதி வரை நடந்தது. கடந்த 10-ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி இந்த இடைத்தேர்தலில் மொத்தம் 77 வேட்பாளர்கள் களமிறங்கினர். காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளராக கே.எஸ். தென்னரசு, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா, தேமுதிக வேட்பாளராக ஆனந்த் உள்ளிட்ட 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 

இந்நிலையில் ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. பின்னர், 6 மணி வரை வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 238 வாக்குச்சாவடி மையங்களில் 237 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், ஈரோடு ராஜாஜிபுரம் வாக்குச்சாவடியில் மட்டும் வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் தெரிவித்ததாவது, இடைத்தேர்தலில் இதுவரை எந்த அசம்பாவிதங்களும் நடக்கவில்லை. தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளோம். தற்போதைய நிலவரப்படி 74.69% வாக்குகள் பதிவாகியுள்ளது.இதுவரை 82,021 ஆண்கள், 87,907 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 17 பேர் வாக்களித்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News