ஈரோடு மாவட்ட அரசு இசைப் பள்ளியில் மாணவ மாணவியர் சேர்க்கை: மே.2ல் தொடக்கம்

Erode news- ஈரோடு மாவட்ட அரசு இசைப் பள்ளியில் மாணவ, மாணவியர் சேர்க்கை மே 2ம் தேதி முதல் தொடங்குகிறது என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Update: 2024-04-30 09:15 GMT

Erode news- ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா (பைல் படம்).

Erode news, Erode news today- ஈரோடு மாவட்ட அரசு இசைப் பள்ளியில் மாணவ, மாணவியர் சேர்க்கை மே 2ம் தேதி முதல்  தொடங்குகிறது என்று  மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

ஈரோடு மாவட்ட அரசு இசைப் பள்ளியில் மாணவ, மாணவியர் சேர்க்கை மே 2ம் தேதி முதல் நடைபெற உள்ளது. இப்பள்ளியில் சேருவதற்கு வயது வரம்பு 12 வயதுக்கு மேல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். குரலிசை, பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளுக்கு 7ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தவில், நாதசுரம் மற்றும் தேவாரம் ஆகிய கலைகளுக்கு தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால் போதுமானது.

இசைப்பள்ளி படிப்பின் கால அளவு மூன்று ஆண்டுகள் ஆகும். இசைப்பள்ளியில் பயலுகின்ற அனைத்து மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.400 கல்வி உதவித் தொகை வழங்கப்படும். அனைத்து மாணவ, மாணவியர்களுக்கு அரசு விடுதி வசதியும் செய்து தரப்படும். வெளி ஊர்களிலிருந்து வரும் மாணவர்களுக்கு இலவச பேருந்து கட்டண வசதியும் செய்து தரப்படும்.

மூன்று ஆண்டுகள் பயின்று அரசுத் தேர்வு இயக்ககம் நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் கர்நாடக இசைக் கச்சேரிகள் நடத்தவும், நாதசுரம் மற்றும் தவில் வாசித்து தொழில் புரியவும். தேவாரம் பாடுதல் மற்றும் கோவில்களில் ஓதுவாராகப் பணிபுரியவும், வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று திறமைகளை வெளிப்படுத்தவும் வாய்ப்புகள் உள்ளன.

திருக்கோவில்களில் தேவார ஓதுவார் பணியில் சேர்ந்திட இப்பள்ளியில் தேவார இசை பயின்று தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு முன்னுரிமை அளித்து வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று அரசு ஆணையிட்டுள்ளது. எனவே கலை ஆர்வமுள்ள மாணவ மாணவிகள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு தலைமை ஆசிரியர், மாவட்ட அரசு இசைப் பள்ளி, பி.பெ.அக்ரஹாரம். பவானி ரோடு. ஈரோடு-638 001 என்ற முகவரியிலும், 9487247205, 0424-2294365 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News