பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் பக்தர்களுக்கு நீர்மோர் விநியோகம்

ஈரோடு மாவட்டம் பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்க நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

Update: 2023-03-16 12:45 GMT

பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கியது.

தென்னிந்தியாவில் உள்ள சிறப்பு வாய்ந்த 7 சிவன் கோவில்களில் ஒன்றாக ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் உள்ள சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. மேலும் இங்குள்ள கூடுதுறையில் காவிரி ஆறு மற்றும் பவானி ஆறுடன், கண்ணுக்கு புலப்படாத தேவர்களின் அமுத நதியும் இங்கு சங்கமித்து செல்வதாக ஐதீகம்.

இதனால் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து இங்குள்ள கூடுதுறையில் புனித நீராடி சங்கமேஸ்வரர் உடனமர் வேதநாயகி அம்மனையும், ஆதிகேசவ பெருமாள் உடனமர் சீதேவி- பூதேவியையும் வணங்கி செல்வார்கள். 

குறிப்பாக, அமாவாசை நாட்களில் திரளான பக்தர்கள் இங்கு வந்து தங்களுடைய முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து செல்வர். மேலும் திருமண தடை, செவ்வாய் தோஷம், நாக தோஷம் உள்பட பல்வேறு தோஷங்கள் விலக பரிகார பூஜைகள் செய்யவும் ஏராளமான பக்தர்கள் இங்கு வருவார்கள்.

இந்நிலையில், தற்போது கோடை வெப்பம் தொடங்கியதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில் இந்து சமய அறநிலைத்துறை ஆணையரின் உத்தரவின்படி பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு நாள்தோறும் சுமார் 2 ஆயிரம் பேருக்கு காலை 10.30 மணி முதல் பகல் 1 மணி வரை நீர்மோர், எலுமிச்சை ஜூஸ் வழங்க திட்டமிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கோயில் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உதவி ஆணையர் சுவாமிநாதன், பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கி தொடக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், கோயில் ஊழியர்கள், பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். கோடை காலம் முடியும் வரையில் நாள்தோறும் நீர்மோர் வழங்கப்படும் என கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News