ஈரோடு மாநகராட்சி அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தை இன்று தூய்மை பணியாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட னர்

Update: 2023-06-07 14:15 GMT

ஈரோடு மாநகராட்சி அலுவலகம் முன்பு, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களில் 60 வார்டுகள் உள்ளன. மாநகராட்சி பகுதியில் தினமும் சராசரியாக 250 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. மாநகராட்சி சார்பில் ஒப்பந்த அடிப்படையில் 1200க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர் கள் தினக்கூலியாக தூய்மை பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் 500க்கும் மேற்பட்ட நிரந்தர பணியாளர்களும் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


இவர்களுக்கு வார்டு வாரியாக தூய்மைப்பணி பிரிக்கப்பட்டு அதன்படி தூய்மைப்பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் ஒப்பந்த அடிப்படையில் தினக்கூலிகளாக வேலை செய்யும் தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடு பட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக இன்று (புதன்கிழமை) காலை அனைத்து தொழிற்சங்கம் சார்பில், தூய்மை பணிகளை தனியாருக்கு ஒப்பந்த முறையில் விடுவதை கைவிட வேண்டும். சேகரிக்கும் குப்பை அளவிற்கேற்ப ஊதியம் வழங்கும் டெண்டர் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்.


480 நாட்கள் பணியாற்றிய தினக்கூலி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஊதிய உயர்வை அனைத்து தினக்கூலி பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் இன்று பணிகளை புறக்கணித்து மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தில் ஏஐடியுசி தலைவர் சின்னசாமி, சிஐடியு சுப்பிரமணியன் மற்றும் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News