ஈரோடு மாவட்டத்தில் குடியரசு தினத்தில் விடுமுறை அளிக்காத 70 நிறுவனங்கள் மீது நடவடிக்கை...

ஈரோடு மாவட்டத்தில், குடியரசு தினத்தில் விடுமுறை அளிக்காத 70 நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Update: 2023-01-27 05:41 GMT

குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் அவ்வாறு விடுமுறை அளிக்காத பட்சத்தில் மாற்றுவிடுப்பு அல்லது இரட்டிப்பு ஊதியம் உள்ளிட்ட சலுகை வழங்க வேண்டும் என்றும் தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தி உள்ளது. மேலும், அதுகுறித்து உரிய முறையில் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஈரோடு மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் திருஞானசம்பந்தம் தலைமையில் தொழிலாளர் துணை ஆணையர்கள் மற்றும் அலுவலர்கள் ஈரோடு மாவட்டத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஈரோடு, பவானி, பெருந்துறை, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 93 இடங்களில் அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

43 கடைகள் 41 உணவகங்கள் 9 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 93 நிறுவனங்களில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டதில், 70 நிறுவனங்களில் விதிமுறை மீறல் கண்டுபடிக்கப்பட்டது. அதாவது, தங்களது நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காமல் இருந்தது, விடுமுறை தினமான குடியரசு தின விழாவில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்க அல்லது மாற்று விடுப்பு வழங்க 24 மணி நேரத்திற்கு முன்னதாக அறிவிப்பு வழங்கி அதன் நகலை சம்பந்தப்பட்ட தொழிலாளர் உதவி ஆணையாளருக்கு அனுப்பி ஒப்புதல் பெறாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து அந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை நாட்கள் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News