ஈரோடு வழியாக சென்ற ரெயிலில் கேட்பாரற்றுக் கிடந்த 8 கிலோ கஞ்சா

ஈரோடு வழியாக சென்ற ரெயிலில் கேட்பாரற்றுக் கிடந்த 8 கிலோ கஞ்சா பேக்கை கைப்பற்றிய ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-10-24 07:00 GMT

ஈரோடு ரயிலில் கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கைப்பற்றினர்.

ஈரோடு ரெயில் நிலையத்தில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட ரெயில்கள் வந்து செல்கின்றன. குறிப்பாக வெளி மாநிலங்களில் இருந்து அதிக அளவு ரெயில்கள் வந்து செல்கின்றன. இதனால் ஈரோடு ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரோடு ரெயில் நிலையத்தில் வந்து நிற்கும் ஒவ்வொரு ரெயில் பெட்டிகளை சென்று சோதனை செய்து வருகின்றனர். சமீபகாலமாக வெளி மாநிலங்களில் இருந்து வரும் விரையில்களில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், கஞ்சா போன்றவை அதிக அளவில் கடத்தி வரப்படுகிறது.

ஏற்கனவே இது சம்பந்தமாக சிலரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு கூட புகையிலைப் பொருட்கள், கஞ்சா கடத்தி வெளிமாநில பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை 6.30 மணி அளவில் ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வந்தது. இதையடுத்து ஈரோடு ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயிலை சோதனை செய்தனர்.

ஒவ்வொரு பெட்டியாக போலீசார் சோதனை செய்தபோது ஒரு பெட்டியில் சந்தேகப்படும் வகைகள் பேக் ஒன்று இருந்தது. இதுகுறித்து போலீசார் அந்தப் பெட்டியில் பயணம் செய்த பயணிகளிடம் கேட்டனர்.

ஆனால் பணிகள் இந்த பேக் தங்களுடையது இல்லை என்று கூறிவிட்டனர். இதையடுத்து பாதுகாப்பு படை போலீசார் பேக்கை திறந்து பார்த்தனர். அதில் 8 கிலோ கஞ்சா இருந்தது. வெளிமாநிலத்தில் இருந்து யாரோ கஞ்சாவை கடத்தி விற்க கொண்டு வந்த போது போலீசை பார்த்ததும் மாட்டி விட கூடாது என்பதற்காக பேக்கை அங்கேயே வைத்துவிட்டு தப்பி ஓடியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News