திமுக ஆட்சியில் மின்சாரத் துறையின் அடுத்த அதிர்ச்சி: தமாக இளைஞரணி குற்றச்சாட்டு

2022-23- ஆம் ஆண்டிற்கான திருத்தியமைக்கப்பட்ட மின்சார கட்டணம் 10.9.2022 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

Update: 2022-11-10 15:45 GMT

தமிழ்மாநில காங்கிரஸ் இளைஞரணி தலைவர் எம். யுவராஜா

திறனற்ற திராவிட மாடல் ஆட்சியில் மின்சாரத் துறையின் அடுத்த அதிர்ச்சியை அளித்துள்ளதாக தமாக குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி மாநில தலைவர் யுவராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.:

2022-23- ஆம் ஆண்டிற்கான திருத்தியமைக்கப்பட்ட மின்சார கட்டணம் 10.9.2022 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது உயர்த்தப்பட்டுள்ள மின்சார கட்டணத்தின்படி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிகப்படியான கட்டணத்தை செலுத்த வேண்டியுள்ளது. எனவே ஒருநாளின் உச்சபட்ச பயன்பாட்டு நேரத்தில் விதிக்கப்பட்ட மின் கட்டணத்தை குறைக்கும் படி பல்வேறு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற் சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தன.

இந்நிலையில் விடியும், விடியும் என்று சொல்லி மக்களை இருளில் மூழ்கடிக்க கூடிய செயல்களை மட்டுமே தொடர்ந்து செய்து வரும் இந்த "திராவிட மாடல்" அரசு சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டணத்தை 25 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக குறைந்துள்ளதாக கூறியிருப்பது மிகுந்த மன வருத்தத்தையும் வேதனையும் அளிக்கிறது.. இந்தத் தகவல் முற்றிலும் தவறானது. மின்சாரத்தை பொறுத்தவரையில் மாதம் ஒரு முறை மின் பயன் அளவீடு, கைத்தறி நெசவாளர்களுக்கு 300 யூனிட் வரை இலவச மின்சாரம், விசைத்தறிக்கு 1,000 யூனிட் வரை இலவச மின்சாரம் போன்ற பல வாக்குறுதிகளை தேர்தல் சமயத்தில் அள்ளி வீசியது இந்த திராவிட மாடல் அரசு. இந்த போலி வாக்குறுதிகள் மூலம் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த பின்னர், இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மாறாக மின் கட்டணத்தை உயர்த்தி மக்கள் மீது கூடுதல் சுமையை சுமத்தியிருக்கிறது.

மின் கட்டண உயர்வு மூன்று வகையானது. ஒன்று நாம் பயன்படுத்தும் மாதாந்திர மின் கட்டண அளவிற்கு ஏற்ப மின் பயன்பாடு அதற்குண்டான கணக்கீட்டு தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இரண்டாவதாக நிலையான கட்டணங்கள் (FIXED CHARGES} மிக அதிக அளவில் உயர்த்தப்பட்டிருக்கிறது. மூன்றாவதாக உச்சபட்ச பயன்பாட்டு நேரத்தில் (பீக் ஹவர்) என்று ஒரு பயன்பாட்டு நேரத்தை அதிகப்படுத்தி காலை 4 மணி நேரம், இரவு 4 மணி நேரம் கொண்டு வந்து அதற்கு 25 சதவிகிதம் கூடுதல் கட்டணம் கொண்டு வந்து மின் இணைப்பில் உள்ள மீட்டரை மாற்றும் வரை இது நடைமுறையில் இருக்கும் என்று கூறியிருந்தார்கள்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வைத்த கோரிக்கை இப்போதுள்ள நிலையான கட்டணத்தை (FIXED CHARGES} பழைய நிலைக்கே கொண்டு வரவேண்டும். உச்சபட்ச பயன்பாட்டு நேரத்தை (பீக் ஹவர்) முற்றிலுமாக நீக்க வேண்டும். மற்ற ஒரு முறை செலுத்த வேண்டிய பயனீட்டாளர்களுக்கு விலையேற்றம் இரு மடங்கு ஆகியிருந்ததை பழைய நிலைக்கு கொண்டு போக வேண்டும். இவை செய்தால் மட்டுமே சிறு குறு தொழில் பிழைக்கும் என்று கூறியிருந்தார்கள். ஆனால் இந்த திராவிட மாடல் அரசு இதிலே அந்த 25 சதவீதம் உச்சபட்ச பயன்பாட்டு நேரத்தை (பீக் ஹவர்) மட்டும் 10 சதவீதத்திற்கு குறைத்தால் எந்த வகையில் சிறு குறு தொழில் அதிக அளவில் பயன்படுத்த பட முடியும் என்பது புரியாத புதிராகவும் வேதனை அளிக்கும் செயலாகவும் உள்ளது. இந்த முடிவு ஏற்புடையது அல்ல. இந்த முடிவினால் யாருக்கும் எந்தவித நன்மையும் அதிக அளவில் மாற்றத்தை ஏற்படுத்திட முடியாது.

பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் என்று கூறி அதில் சில மாற்றங்களை கொண்டு வந்து குறிப்பிட்ட சில பேருந்துகளில் மட்டுமே இலவசப் பயணம் என்பது, சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக ஆட்சி செய்து வரும் திராவிட மாடல் அரசு, தற்போது தான் பொதுமக்களை பாதிக்கின்ற வகையில் சொத்து வரி உயர்வு, பால் பொருட்கள் விலை உயர்வு என தொடர்ந்து எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல மின்கட்டணத்தை குறைப்பது போல் உயர்த்தி இருப்பது நியாயமற்ற மக்கள் விரோத செயல். சொல்வது ஒன்று, செய்வது ஒன்று என்ற ரீதியில் தொடர்ந்து செயல்பட்டு வரும் திமுக அரசின் இந்த மக்கள் விரோத போக்கிற்கு கடும் கண்டனத்தை தமாகா இளைஞரணி சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்..

Tags:    

Similar News