தீபாவளி எதிரொலி: கருங்கல்பாளையம் சந்தையில் மாடுகள் வரத்து குறைவு

தீபாவளி எதிரொலியாக, ஈரோடு கருங்கல்பாளையம் சந்தையில் மாடுகள் வரத்து குறைந்து இருந்தது.

Update: 2021-11-05 09:30 GMT

தீபாவளி எதிரொலியாக, கருங்கல்பாளையம் சந்தையில் மாடுகள் வரத்து குறைவாக இருந்தது. 

ஈரோடு,  கருங்கல்பாளையத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை மாட்டுச்சந்தை நடப்பது வழக்கம். இந்த சந்தைக்காக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, கோவா, மகாராஷ்டிரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வருவது வழக்கம்.

கடந்த சில வாரங்களாக பரவலாக மழை பெய்து அதன் காரணமாக வெளிமாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வரவில்லை. இதனால், மாடு வரத்து குறைவாக இருந்தது. இதேபோல் விற்பனையும் குறைவாக இருந்தது. அத்துடன், பண்டிகை காலம் என்பதால், மாடுகள் வரத்து மேலும் குறைந்தது.

தீபாவளி பண்டிகையான நேற்று, வழக்கம் போல் கருங்கல்பாளையத்தில் மாட்டுச்சந்தை தொடங்கியது. பண்டிகை தினம் என்பதால் வியாபாரிகள், கால்நடை வளர்ப்போர் மட்டுமின்றி லாரி, வேன், மினி டோர் ஆட்டோக்களும் வாடகைக்கு குறைந்த அளவே வந்திருந்தனர். வழக்கமாக 600 மாடுகளுக்கு மேல் வரக்கூடிய சந்தையில் நேற்று 250 பசு, எருமை, கன்று குட்டிகள் மட்டுமே விற்பனைக்கு வந்தன. கன்று குட்டிகள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்கப்பட்டன. பசுமாடு ரூ.30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரையும், எருமை மாடு ஒன்று  ரூ. 35 முதல் 45 ஆயிரம் வரையும் விற்பனையானது.

Tags:    

Similar News