கோபி அருகே மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு: வனத்துறை விசாரணை..!

ஈரோடு மாவட்டம் கோபி அருகே ஆண் யானை ஒன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்தது குறித்து, வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-06-18 12:00 GMT

மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு (கோப்புப் படம்).

கோபி அருகே ஆண் யானை ஒன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்தது குறித்து, வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 ஈரோடு மாவட்டம் கோபி கள்ளிப்பட்டி அடுத்த பெருமுகை ஊராட்சி கரும்பாறை வனப்பகுதியையொட்டி உள்ள விவசாயத் தோட்டம் அருகே ஆண் யானை ஒன்று இறந்து கிடந்தது. இதுகுறித்து, அங்கு தோட்டத்து வேலைக்கு வந்தவர்கள் அந்தியூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர், உயிரிழந்து கிடந்த யானையை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது, உயிரிழந்த யானைக்கு சுமார் 12 வயது இருக்கும் எனத் தெரியவந்தது. 

மேலும், கரும்பாறை வனப்பகுதி அருகேயுள்ள விவசாய தோட்டங்களில் வாழை, மரவள்ளிக் கிழங்கு உள்ளிட்ட பயிர்களை வன விலங்குகளிடம் இருந்து பாதுகாக்க மின்வேலி அமைந்திருந்தனர். அதில், யானை சிக்கி உயிரிழந்து இருக்கலாம் என்று வனத்துறையினர் கருதுகின்றனர். இதுகுறித்து வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.

அரசு கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டு இறந்த யானையை உடற்கூறு ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட பிறகே யானையின் உயிரிழப்பிற்கான முழுமையான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர். 

Tags:    

Similar News