ஈரோட்டில் வருகிற 19 ம்தேதி மின்வாரிய ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டம்

மின் வாரியத்தில் இருந்து ஓய்வு பெற்ற அலுவலர், பணியாளர்களுக்கான ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஈரோட்டில் ஜூன் 19ம் தேதி நடக்கிறது.

Update: 2024-06-16 13:25 GMT

மின்வாரிய ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம் (பைல் படம்).

ஈரோட்டில் மின் வாரியத்தில் இருந்து ஓய்வு பெற்ற அலுவலர், பணியாளர்களுக்கான ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஜூன் 19ம் தேதி நடக்கிறது.

இதுகுறித்து ஈரோடு மண்டல மின் பகிர்மான தலைமைப் பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு மின்சார வாரிய உத்தரவின்படி, ஈரோடு மண்டல பகிர்மான தலைமைப் பொறியாளர் கட்டுப்பாட்டின் கீழ், ஈரோடு மண்டலம் மற்றும் அதன் பகுதியில் உள்ள பிற மின் வாரிய அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற மின் வாரிய அலுவலர், பணியாளர்களின் குறைகளை நேரில் கேட்கவும், மனுக்களை பெறவும் உடனடியாக தீர்த்து வைக்கவும், உரிய ஆலோசனை வழங்கவும் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

அக்குழுவினர் ஒவ்வொரு காலாண்டிற்கு ஒரு முறை ஈரோடு மண்டல அலுவலகத்தில் கூடி மின் வாரியத்திலிருந்து ஓய்வு பெற்ற அலுவலர், பணியாளர்களின் குறைகளை நேரில் கேட்கவும், மனுக்களை பெறவும், உரிய நிவாரணம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 2024-ஆம் ஆண்டு இரண்டாம் காலாண்டிற்கான மின் வாரிய ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம் வரும் ஜூன் 19ம் தேதி புதன்கிழமை காலை 11 ணிக்கு எண்.948, ஈ.வி.என். சாலை, ஈரோட்டில் அமைந்துள்ள மின் வாரிய ஆய்வு மாளிகையில் நடைபெற உள்ளது.

அதுசமயம் மின் வாரியத்திலிருந்து ஓய்வு பெற்ற அலுவலர், பணியாளர்கள் மேற்கண்ட வாய்ப்பினை பயன்படுத்தி தங்களின் குறைகளை தீர்த்துக் கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News