ஈரோடு வாக்கு எண்ணும் மையத்தில் டிஜிட்டல் திரை கோளாறு: ஆட்சியர் விளக்கம்

ஈரோடு வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி பதிவுகள் கட்டுப்பாட்டு அறையில் உள்ள டிஜிட்டல் திரையில் தெரியவராதது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா விளக்கமளித்துள்ளார்.

Update: 2024-04-30 07:00 GMT

டிஜிட்டல் திரை (கோப்புப் படம்).

ஈரோடு வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி பதிவுகள் கட்டுப்பாட்டு அறையில் உள்ள டிஜிட்டல் திரையில் தெரியவராதது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா விளக்கமளித்துள்ளார்.

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான கட்டுபாட்டு அறை சித்தோட்டில் உள்ள ஈரோடு அரசினர் பொறியியல் கல்லூரியில் அட்மின் பிளாக்கில் செயல்பட்டு வருகிறது. இன்று காலை குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகள் டிஜிட்டல் திரையில் தெரியவில்லை.

தொடர்ந்து, கட்டுப்பாட்டு அறைக்கு வரும் சிசிடிவி ஒயர் இணைப்பில் பழுது ஏற்பட்டதால் கட்டுப்பாட்டு அறையில் சிசிடிவி பதிவுகள் தெரியவில்லை என தெரியவந்தது. இதனையடுத்து, சிசிடிவி இணைப்புகள் சரிசெய்யப்பட்ட நிலையில், கட்டுப்பாட்டு அறையில் உள்ள டிஜிட்டல் திரையில் தெரிந்ததாக ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் சித்தோட்டில் உள்ள ஈரோடு அரசினர் பொறியியல் கல்லூரியில் சட்டமன்ற தொகுதி வாரியாக தனித்தனியாக மத்திய மற்றும் மாநில காவலர் மூன்று அடுக்கு பாதுகாப்பு வசதியுடனும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதற்கான கட்டுப்பாட்டு அறை அட்மின் பிளாக்கில் செயல்பட்டு வருகிறது. கட்டுப்பாட்டு அறையில் கண்காணிப்பு கேமராக்கள் பதிவுகள் தெரியும் வகையில் டிஜிட்டல் திரை அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் வேட்பாளர்கள் பிரநிதிகள் மற்றும் அரசு அலுவலர்களும் 24 நேரமும் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், 6 சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட இருப்பு அறையின் வெளிப்புற பகுதியில் சிசிடிவி கேமராக்கள் பதிவுகள் தெரியும் வண்ணம் கூடுதலாக டிஜிட்டல் திரை வைக்கப்பட்டு கண்காணிப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று (ஏப்ரல் 30) காலை சுமார் 7 மணி அளவில் கட்டுப்பாட்டு அறையில் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட டிஜிட்டல் திரையில் சிசிடிவி பதிவுகள் தெரியவில்லை என்ற தகவல் கிடைத்தது.

அதன்பேரில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், வருவாய் கோட்ட அலுவலருமான சதீஷ்குமார் பிரநிதிகளுடன் ஆய்வு செய்ததில் இருப்பு அறையில் உள்ள சிசிடிவி கேமராக்கள் பழுதேதும் இல்லாமல் செயல்பட்டு வந்ததும், ஸ்ட்ராங் ரூம் அறையின் வெளியே வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் திரையில் சிசிடிவி காட்சிப் பதிவுகள் இருந்துள்ளதும், இருப்பு அறையில் இருந்து அட்மின் பிளாக்கில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு வரும் சிசிடிவி ஒயர் இணைப்பில் பழுது ஏற்பட்டதால் கட்டுப்பாட்டு அறையில் உள்ள டிஜிட்டல் திரையில் சிசிடிவி பதிவுகள் தெரியவில்லை என்பதும் கண்டறியப்பட்டு, விவரங்கள் வேட்பாளர்களின் பிரநிதிகளுக்கு விளக்கப்பட்டது.

பின்பு சிசிடிவி இணைப்புகள் சரிசெய்யப்பட்டு காலை 9 மணி அளவில் கட்டுப்பாட்டு அறையில் உள்ள டிஜிட்டல் திரையில் சிசிடிவி பதிவுகள் முழுமையாக தெரிந்தது. இதுகுறித்து நியமனம் செய்யப்பட்ட ஒப்பந்ததாரருக்கு மீண்டும் சிசிடிவி இணைப்புகளை கள ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கவும், இனிவருங்காலங்களில் இதுபோன்ற தவறுகள் நிகழாவண்ணம் இருக்கவும் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News