மே 5ம் தேதியை வணிகர் தின நாளாக அறிவித்து, அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும்: ஈரோட்டில் விக்கரமராஜா பேட்டி

Erode news- மே 5ம் தேதியை வணிகர் தின நாளாக அறிவித்து, அன்றைய நாளை அரசு விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என ஈரோட்டில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கரமராஜா பேட்டியளித்தார்.

Update: 2024-04-21 11:00 GMT

Erode news- ஈரோடு தண்ணீர்பந்தல்பாளைத்தில் நடைபெற்ற மாவட்டப் பொதுக்குழு கூட்டத்தில் பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கரமராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

Erode news, Erode news today- மே 5ம் தேதியை வணிகர் தின நாளாக அறிவித்து, அன்றைய நாளை அரசு விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என ஈரோட்டில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கரமராஜா பேட்டியளித்தார்.

ஈரோடு தண்ணீர்பந்தல்பாளைத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் ஈரோடு மாவட்ட பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (இன்று) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் இரா.க.சண்முகவேல் தலைமை வகித்தார். ஈரோடு மாவட்டச் செயலாளர் பொ.இராமச்சந்திரன் ஆண்டறிக்கையை வாசித்தார். மாவட்டப் பொருளாளர் உதயம் பொ.செல்வம் வரவு செலவு அறிக்கையை வாசித்தார்.


கோவை மண்டலத் தலைவர் சூலூர் டி.ஆர்.சந்திரசேகரன் புதிய நிர்வாகிகளை அறிவித்தார். மாநிலத் துணைத் தலைவர் ப.திருமூர்த்தி புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துரை வழங்கினர். இந்த பொதுக்குழு கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கலந்து கொண்டு மே 5ம் தேதி நடைபெற உள்ள 41வது வணிகர் தினம் மாநில மாநாடு குறித்துப் பேசினார். 

பின்னர், அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், எங்களது கோரிக்கை ஏற்று தேர்தல் நடைமுறை விதிகளை ஏப்ரல் 19ம் தேதியில் இருந்து தளர்த்தியுள்ளதற்காக தேர்தல் ஆணையத்துக்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

மே 5ம் தேதியை வணிகர் தின நாளாக அறிவித்து, அன்றைய நாளை அரசு விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக வரும் மே 5ம் தேதி மதுரையில் பிரமாண்டமான அளவில் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.


இந்த மாநாட்டில் ஜிஎஸ்டி சட்ட விதிகள், உணவு சட்ட விதிகள், தொழிலாளர் சட்ட விதிகள் உள்ளிட்ட பல்வேறு வரி பிரச்சனைகளை வணிகர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்த வரி பிரச்சனைகளால் வணிகர்கள் அடிமைப்பட்டு கிடக்க வேண்டிய நிலை இருப்பதால் அவற்றை தகர்த்தெறிவதாக இந்த மாநாடு அமையும்.

வணிகர்கள் தங்கள் லைசென்ஸ் ஒரு ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் என்ற சட்ட விதியை மூன்றாண்டுகளுக்கு ஒரு முறையாக மாற்றம் செய்து தருவதாக ஏற்கனவே முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த லைசென்ஸ் பெரும் முறையை ஒற்றைச் சாளர முறையாக மாற்றி அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை இந்த மாநாட்டில் வலியுறுத்துவோம்.


எங்களைப் பொருத்த வரையிலும் ஜிஎஸ்டி வரி என்பது ஒரு முனை வரியாக இருக்க வேண்டும். அதாவது தற்போது உள்ள 5%, 8%, 12%, 18% என்ற விகிதசாரத்தில் இல்லாமல் வரி விதிப்பை எளிமைப்படுத்தி 7% முதல் 10% ஆக இருக்கும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. இதனை அடுத்ததாக பதவியேற்க உள்ள மத்திய அரசு செய்யும் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில், முன்னதாக மாநகரத் தலைவர் அந்தோணி யூஜிப் வரவேற்று பேசினார். மாவட்ட இளைஞரணித் தலைவர் நெல்லை ராஜா முடிவில், மாவட்ட இளைஞரணி செயலாளர் லாரன்ஸ் ரமேஷ் நன்றி கூறினார். இதில், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்டப் பொறுப்பாளர் பாலகிருஷ்ணன், ஈரோடு மாவட்ட, மாநகர நிர்வாகிகள், மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள், இணைப்பு சங்க நிர்வாகிகள், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் உள்பட பலர் திரளாக பங்கேற்றனர்.

Tags:    

Similar News