தீபாவளி பண்டிகை: கடை வீதியில் அலைமோதிய கூட்டம்

ஈரோடு கடை வீதிகளில் குவித்த மக்களால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்த வாகன ஓட்டிகள்.

Update: 2021-10-25 02:15 GMT

மக்கள் வெள்ளத்தில் மிதந்து வரும் வாகனங்கள்.

தீபாவளி பண்டிகை நவம்பர் 4ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஜவுளிக் கடைகளில் விற்பனை களைகட்டத் தொடங்கியுள்ளது. பெரும்பாலான ஜவுளிக் கடைகள் மின்னொளியில் ஜொலிக்கின்றன. மேலும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு சலுகை திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்களும் ஆர்வமாக சென்று தங்களது குடும்பத்தினருக்குத் தேவையான புதிய ஆடைகளை வாங்கி வருகின்றனர்.இந்லையில் தீபாவளி பண்டிகை கொண்டாட 10 நாள்களே உள்ளதால் ஈரோடு கடை வீதிகளில் பொதுமக்கள் குவிந்தனர். இதில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. காலையில் இருந்தே பொதுமக்கள் பலர் ஜவுளிகள் வாங்க வரத் தொடங்கினார். பகல் 11 மணியளவில் கூட்டம் அலைமோதியது.

ஈரோடு ஆர்.கே.வி.சாலை, நேதாஜி சாலை, மணிக்கூண்டு, ஈஸ்வரன் கோயில் வீதி, கனி ஜவுளிச் சந்தை திருவேங்கடசாமி வீதி, பிரப் சாலை உள்ளிட்ட பகுதிகளில் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்பட்டது. சாலையோரமாக குறைந்த விலையில் சட்டை சேலை, சுடிதார், டி.சாட் போன்ற துணிகள் குவித்து வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. அந்த ஆடைகளையும் பொதுமக்கள் பலர் விரும்பி வாங்கினர். இதனால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது.

கடை வீதிகள் வழியாக சென்ற பேருந்து, கார், இருசக்கர வாகனங்கள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் பொதுமக்களின் கூட்டத்துக்கு இடையே மெதுவாக ஊர்ந்து சென்றன. இதற்காக போலீஸார் ஆங்காங்கே நின்று போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News