ஈரோடு மாவட்டத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

ஈரோடு மாவட்டத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தால் பணிகள் பாதிக்கப்பட்டது.

Update: 2024-07-01 12:00 GMT

கோபிசெட்டிபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு வழக்கறிஞர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

ஈரோடு மாவட்டத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தால் பணிகள் பாதிக்கப்பட்டது.

மத்திய அரசு குற்றவியல் சட்டங்களின் பெயரையும், சில சட்டங்களையும் மாற்றியுள்ளது. இதற்கு நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் புதிய சட்டம் இன்று (1ம் தேதி) முதல் அமுலுக்கு வந்தது. இதனை கண்டித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில் பணியை புறக்கணித்து போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர்.

அதன்படி, சட்ட திருத்தத்தை உடனே திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பெருந்துறை, கொடுமுடி, அந்தியூர், பவானி உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் பணியாற்றும் வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோபிசெட்டிபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு வழக்கறிஞர் சங்க தலைவர் காளத்திநாதன் தலைமையில், 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். மொத்தம் மாவட்டம் முழுவதும் 1,300க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டன. போராட்டத்தின் அடுத்த கட்டமாக நாளை (செவ்வாய்க்கிழமை) அந்தந்த நீதிமன்றம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வழக்கறிஞர்கள் முடிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News