வாக்கு எண்ணிக்கை தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர் அதிகாரிகளுடன் ஆலோசனை

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-02-28 10:30 GMT

வாக்கு எண்ணிக்கை தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

ஈரோடு மாவட்டம் சித்தோடு, ஈரோடு அரசினர் பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் இன்று (28.02.2023) ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள், பாதுகாப்பாக எடுத்து வரப்பட்டு, தேர்தல் பொது பார்வையாளர் ராஜ்குமார் யாதவ் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான ஹெச்.கிருஷ்ணனுண்ணி மற்றும் அரசியல் கட்சியினர் ஆகியோர் முன்னிலையில் பாதுகாப்பு அறையில் சீல் இடப்பட்டதை தொடர்ந்து முன்னேற்பாடு பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் கிருஷ்ணனுண்ணி தெரிவிக்கையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 238 வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான முறையில் கொண்டுவரப்பட்டு வாக்கு எண்ணும் மையமான சித்தோடு, ஈரோடு அரசினர் பொறியியல் கல்லூரிக்கு எடுத்து வரப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இன்று (28.02.2023) ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம் மற்றும் வி.வி.பேட் ஆகிய இயந்திரங்கள் தனித்தனி அறைகளில் பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் ராஜ்குமார் யாதவ், மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான கிருஷ்ணனுண்ணி மற்றும் அரசியல் கட்சியினர் ஆகியோர் முன்னிலையில் பாதுகாப்பு அறையில் சீல் இடப்பட்டது.

மேலும், வாக்கு எண்ணும் மையத்தினை சுற்றி மத்திய காவல் படை, காவல்துறையினர் 24 மணிநேர பாதுகாப்பும் மற்றும் சி.சி.டி.வி 48 கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறை மற்றும் பாதைகள் ஆகியவற்றை கண்காணிக்கவும் 450 காவல்துறையினர் 1 சுழற்சிக்கு 150 காவலர்களும் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின் படி அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் விரிவான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து தேர்தல் பொது பார்வையாளர் திரு.ராஜ்குமார் யாதவ், மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவரும் ஹெச்.கிருஷ்ணனுண்ணி மற்றும் அரசியல் கட்சியினர் ஆகியோர் முன்னிலையில் வாக்குப்பதிவு தொடர்பாக கூர்ந்தாய்வுக்கூட்டம் (Sqruteny) நடைபெற்றது. இந்நிகழ்வின்போது தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையர் சிவகுமார், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துக்கிருஷ்ணன், வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News