ஆளுநரை கண்டித்து ஈரோட்டில் மார்ச் 13 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த இந்திய கம்யூனிஸ்ட் முடிவு

தமிழக ஆளுநரை கண்டித்து ஈரோட்டில் மார்ச் 13 ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

Update: 2023-03-11 12:15 GMT

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட குழு கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட குழு கூட்டம் ஈரோட்டில் நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் சின்னசாமி தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் பெரியசாமி, மாவட்ட செயலாளர் பிரபாகரன், மாநில துணை தலைவர் துளசிமணி, பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தியும், பல மாதங்களுக்கு பிறகு மசோதாவை திருப்பி அனுப்பிய தமிழக ஆளுநரின் ஜனநாயக விரோத போக்கை கண்டிப்பதோடு, மாநில உரிமைகள் காக்கவும், அதற்கு தடையாக உள்ள ஆளுநரை கண்டித்தும் வருகின்ற 13 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஈரோடு சூரம்பட்டி நால்ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், விசைத்தறியாளர்களுக்கு இலவச மின்சாரம் 750 யூனிட்டில் இருந்து 1,000 யூனிட்டாக உயர்த்தியதற்கும், கைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் 200 யூனிட்டில் இருந்து 300 யூனிட்டாக உயர்த்திய தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

கேஸ் விலையை உயர்த்திய மத்திய பாஜக அரசை கண்டிப்பதோடு, விலையை உடனடியாக குறைக்க கேட்டுக்கொள்வது, சேலம்-கொச்சி தேசிய நெடுஞ்சாலை, பெருந்துறை புறவழிச்சாலையில் விபத்துக்களை தவிர்க்க தேவையான இடங்களில் மேம்பாலம், சர்வீஸ் சாலைகள் அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், பெருந்துறை தாலுகாவில் சென்னிமலையை பிரித்து தனி தாலுகாவாக செயல்படுத்துவது, சிப்காட் தொழிற்சாலையில் நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளதால், அப்பகுதிமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News