ஈரோடு மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

ஈரோடு மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வழங்கினார்.

Update: 2024-10-07 13:30 GMT

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தாட்கோ மூலம் தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற தற்காலிக தூய்மை பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கல்வி உதவித்தொகைக்கான காசோலையினை ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வழங்கிய போது எடுத்த படம்.

ஈரோடு மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வழங்கினார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (7ம் தேதி) நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமை வகித்தார். 

இதில், வீட்டுமனை பட்டா, மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் காவல் துறை நடவடிக்கை உள்ளிட்ட 224 கோரிக்கை மனுக்களை பொதுமக்களிடம் இருந்து பெற்றார்.


இதனையடுத்து, பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார். தொடர்ந்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் ஒரு பயனாளிக்கு நத்தம் நிறுத்தப்பட்டது நீக்கம் செய்த பட்டாவினை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, தாட்கோ மூலம் தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரியத்தில் பதிவுபெற்ற தற்காலிக தூய்மை பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 9 நபர்களுக்கு தலா ரூ.1000 வீதம் ரூ.9 ஆயிரம் மதிப்பில் கல்வி, மகப்பேறு மற்றும் ஓய்வூதிய உதவித்தொகையினை வழங்கினார்.


மேலும், ஒரு பயனாளிக்கு ரூ.25 ஆயிரம் மதிப்பில் இயற்கை மரண உதவித்தொகையும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து இளங்கலை பொறியியல் பயிலும் கோசணம் பகுதியை சேர்ந்த ஒரு மாணவனுக்கு ரூ.50 ஆயிரத்துக்கான கல்வி உதவித்தொகையினையும் அவர் வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, துணை ஆட்சியர் (பயிற்சி) சிவபிரகாஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் செல்வராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராஜகோபால் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News