ஈரோடு மாநகராட்சிக்கு முதல்வர் அறிவித்த புதிய திட்டங்கள்

ஈரோடு உட்பட 3 மாவட்டங்களில் முடிவுற்ற திட்டங்களை துவக்கி வைத்ததுடன் புதிய திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Update: 2024-03-13 13:30 GMT

பொள்ளாச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசிய போது எடுத்த படம்.

ஈரோடு மாநகராட்சிக்கு புதிய திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ஈரோடு உட்பட 3 மாவட்டங்களில் முடிவுற்ற திட்டங்களை துவக்கி வைத்ததுடன் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர், விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின்  மாவட்ட வாரியாக புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். 

ஈரோடு மாநகராட்சிக்கான அறிவிப்புகள்:- 

ஒருங்கிணைந்த மொத்த காய்கறி. கனிகள் மற்றும் மளிகை சந்தை வளாகம் அமைத்தல்:-

ஈரோடு மாநகராட்சியின் மையப்பகுதியில் தினசரி காய்கறி சந்தை அமைந்துள்ளதால் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் கோரிக்கையின்படி சோலார் பகுதியில் உள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான நிலத்தில் ரூ.20 கோடியில் நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த மொத்த காய்கறி கனிகள் மற்றும் மளிகை சந்தை வளாகம் அமைக்கப்படவுள்ளது. இதனால் ஒரே இடத்தில் அனைத்து பொருட்களும் பொதுமக்கள் வாங்கலாம். மாநகரப் பகுதிக்குள் கனரக போக்குவரத்து நெரிசல் குறையும். சுற்றியுள்ள கிராமப்புற விவசாயிகள் பெரும் அளவில் பயன் அடைவார்கள்.

உலகத்தரம் வாய்ந்த சுற்றுச்சூழல் பூங்காவாக தரம் உயர்த்துதல்:-

ஈரோடு மாநகராட்சிக்கு சொந்தமான வ.உ.சி பூங்கா, ஈரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்களுக்கு பொழுதுபோக்கு அம்சமாக உள்ளது. ஈரோடு மாநகர மக்களின் நீண்ட நாளைய கனவின்படி மேற்படி பூங்காவை உலக தரம் வாய்ந்த சுற்றுசூழல் பூங்காவாக அமைக்கும் பணி ரூ.15 கோடியில் அமைக்கப்படவுள்ளது. இப்பணி முழுமையாக முடிவுறும் பொழுது ஈரோடு மற்றும் சுற்றுப்புற மக்களுக்கு பொழுதுபோக்கு இடமாக அமைவதுடன் பசுமை புல்வெளிகளால் காற்று மாசுடைவது தடுக்கப்பட்டு சுற்றுசூழல் மேம்பாடு அடையும்.

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல்:-

ஈரோடு மாநகராட்சியானது காவிரி நதியின் மேற்கு கரையில் 1.30 கி.மீ நீளத்தில் அமைந்துள்ளது. இம்மாநகராட்சிகுட்பட்ட காவிரி ஆற்றின் கரைப்பகுதியில் சோழீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் ஆற்றுக்கு வரும் மக்களால் ஏற்படுத்தப்படும் கழிவுகளால் அப்பகுதி மிகவும் பாதிக்கப்படுவதுடன் காவிரி ஆறு மாசு ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதனைத் தவிர்க்கும் பொருட்டு சோழீஸ்வரன் கோவில் அருகில் காவிரி ஆற்றின் கரையில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பூங்காக்கள் உருவாக்குதல் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல் ஆகிய பணிகளை ரூ.30 கோடியில் அமைக்கப்படவுள்ளது. இப்பணி முழுமையாக முடிவுறும் பொழுது காவிரி ஆறு மாசுபடுவது தடுக்கப்படுவதுடன் பொதுமக்களுக்கு பொழுதுபோக்கு இடமாக அமையும்.

Tags:    

Similar News