பவானி செல்லியாண்டி அம்மன் கோவில் திருவிழா - போக்குவரத்து மாற்றம்
செல்லியாண்டி அம்மன் கோவில் மாசித்திருவிழா மார்ச் 2ஆம் தேதி பவானியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.;
கோப்பு படம்
ஈரோடு மாவட்டம் பவானி, செல்லியாண்டி அம்மன் கோவில் மாசித் திருவிழாவையொட்டி வருகிற 2-ஆம் தேதி பவானி நகரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது என பவானி துணை போலீஸ் சூப்பி ரண்டு கார்த்திகேயன் கூறி உள்ளார்.
இதுகுறித்து பவானிதுணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் கூறியதாவது: பவானி செல்லியாண்டி அம்மன் கோவில் மாசித்திரு விழாவையொட்டி வருகிற 2-ம் தேதி (புதன்கிழமை) சேறு பூசும் விழா நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனுக்கு சேறு பூசி தங்களுடைய நேர்த் திக்கடனை செலுத்துவர். எனவே சேறு பூசும் விழா அன்று பவானி நகருக்குள் வாகனங்கள் வந்து செல்லாமல் இருக்க போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி மேட்டூரில் இருந்து பவானி வரும் வாகனங்கள் அனைத்தும், ஊராட்சிக்கோட்டை, செலம்ப கவுண்டன்பாளையம், சின்னியம்பாளையம், ஜம்பை, தளவாய்ப்பேட்டை, குண்டு செட்டிபாளையம் வழியாக லட்சுமி நகர் வந்து அங்கிருந்து ஈரோடு செல்ல வேண்டும்.
ஈரோட்டில் இருந்து பவானி வழியாக மேட்டூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, பெங்களூரு செல்லும் வாகனங்கள் அனைத்தும் பவானி பழைய பஸ் நிலையம், அனைத்து மகளிர் போலீஸ் நிலையம், காடையாம்பட்டி, ஜம்பை, சின்னியம் பாளையம் வழியாக செல்ல வேண்டும். பவானியில் இருந்து சேலம் செல்லும் அனைத்து வாகனங்களும் பவானி பழைய பஸ் நிலையம், லட்சுமி நகர், குமராபாளையம் வழியாக போகவேண்டும். சேலத்தில் இருந்து பவானி நகருக்கு லட்சுமி நகர் வழியாக பழைய பேருந்து நிலையம் வந்து செல்ல வேண்டும் என்றார்.