கடம்பூர் அருகே கஞ்சா செடி பயிரிட்டவர் கைது: ஈரோடு மாவட்ட குற்றச் செய்திகள்...

ஈரோடு மாவட்டம், கடம்பூர் அருகே மக்காச்சோள பயிர்களுக்கு இடையே கஞ்சா செடியினை பயிர் செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-12-01 06:00 GMT

பைல் படம்

கஞ்சா செடி பயிரிட்டவர் கைது:

ஈரோடு மாவட்டம், கடம்பூர் அருகே உள்ள குத்தியாலத்தூர் பவளக்குட்டை பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 33). இவர் வீட்டின் அருகில் உள்ள புறம்போக்கு நிலத்தில் மக்காச்சோளம் பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார்.

இந்தநிலையில் மக்காச் சோள பயிருக்கு இடையே பழனிச்சாமி கஞ்சா செடிகளை வளர்த்து வருவதாக கடம்பூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று தோட்டத்திற்கு போலீசார் சென்று பார்த்த போது, மக்காச்சோள செடிகளுக்கு இடையே கஞ்சா பயிர் செய்து இருந்தது தெரிந்தது. இதையடுத்து 40 கஞ்சா செடிகளையும் பறிமுதல் செய்த போலீசார் பழனிச்சாமியையும் கைது செய்தனர்.

போலி லாட்டரி சீட்டு விற்றவர் கைது‌:

கோபிசெட்டிபாளையம் போலீசார், கூகலூர் குளத்துக்கடை வாட்டர் டேங்க் பகுதியில் நேற்று ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது ஒருவர் போலியாக அச்சடிக்கப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதனையடுத்து போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்ததில் கூகலூர் பெருங்காயம்மாள் வீதியை சேர்ந்த விக்ரமாதித்தன் (26) என்பதும் குயிலி என்ற பெயரில் போலி லாட்டரி சீட்டுகளை அச்சடித்து, விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து விக்ரமாதித்தனை கைது செய்த போலீசார், அச்சடித்த 8 லாட்டரி சீட்டு பறிமுதல் செய்தனர்.

சட்டவிரோதமாக மது விற்றவர் கைது‌:

சத்தியமங்கலம் - பண்ணாரி சாலையில் கோட்டுவீரணாம்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடை அருகே சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரித்ததில், புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் பள்ளிவாயல் பகுதியை சேர்ந்த ரமேஷ் (42) என்பதும் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து 19 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

அடையாளம் தெரியாத முதியவர் பலி:

ஈரோடு ரயில்வே நிலையம் அருகே 70 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் படுத்து கிடந்தார். அதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் ஈரோடு தெற்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் முதியவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் முதியவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஈரோடு தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

தள்ளுவண்டி கடையில் மது அருந்த அனுமதித்த 3 பேர் கைது:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள வண்டிபாளையம் விநாயகர்நகர் மெயின் ரோடு டாஸ்மாக் கடை அருகே தள்ளுவண்டி கடையில் மது அருந்திக்கொண்டிருப்பதாக கடத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது . இதனையடுத்து போலீசார் மது அருந்த அனுமதித்த உக்கரம் பகுதியை சேர்ந்த நடுபழனி (வயது 75), கருப்புசாமி (வயது 40), மருதாச்சலம் (வயது 46) ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Tags:    

Similar News