ஈரோடு மாவட்டத்தில் பட்டாசு விற்பனை செய்ய தற்காலிக உரிமம் பெற அழைப்பு

ஈரோடு மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பட்டாசு விற்பனை செய்ய தற்காலிக உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-09-20 11:15 GMT

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பட்டாசு விற்பனை செய்ய தற்காலிக உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா புதன்கிழமை (இன்று) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-

2023 தீபாவளிப் பண்டிகையினை முன்னிட்டு, பட்டாசு விற்பனை செய்ய தற்காலிக பட்டாசு உரிமம் கோரி விண்ணப்பிக்க விரும்பும் சிறு வணிகர்களின் நலன் கருதி தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகவே அவர்களது வியாபாரத்தை துவங்குவதற்கு ஏதுவாக இணையதளம் மூலமாக விண்ணப்பம் செய்யவும் உரிமங்களை பெற்றுக் கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, மனுதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை பொது இ-சேவை மையங்களில் பட்டாசு உரிமம் கோரும் இடத்தின் புல வரைப்படம், கிரையப்பத்திரம், முகவரிக்கான ஆதாரம் (ஆதார் அட்டை/ குடும்ப அட்டை), சொத்துவரி செலுத்தியதற்கான ரசீது, கடவுச் சீட்டு அளவு புகைப்படம் மற்றும் 0070-60-109-AA-22738 என்ற கணக்கு தலைப்பில் சேவைக் கட்டணமாக ரூ.600 (ரூபாய் அறுநூறு மட்டும்) செலுத்தியதற்கான ரசீது ஆகிய ஆவணங்களுடன் செப்.20ம் தேதி (இன்று) முதல் அக்.19ம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்.

இக்குறிப்பிட்ட காலகெடுவிற்குப்பின் அதாவது அக்டோபர் 19ம் தேதிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. விண்ணப்பம் ஏற்கப்பட்டதெனில் தற்காலிக உரிமத்தையும், நிராகரிக்கப்பட்டதெனில் அதற்கான ஆணையையும் மனுதாரர்கள் இணையதளம் மூலமாகவே பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News