பவானிசாகர் அணை நீர்மட்டம் 64 அடியாக உயர்வு

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை (ஜூன்.29) இன்று காலை 8 மணி நிலவரப்படி 64.00 அடியாக உயர்ந்தது.

Update: 2024-06-29 03:00 GMT

பவானிசாகர் அணைப் பகுதி.

ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் கட்டப்பட்டுள்ள பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும். இந்த அணையின் முக்கிய நீராதாரங்களாக நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், மாயாறும் உள்ளன.

இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் கன மழை பெய்து வருகிறது. இதனால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள காரணத்தால், அணையின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே வருகிறது.

நேற்று (ஜூன்.28) வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 5,894 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (ஜூன்.29) சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 7,149 கன அடியாக அதிகரித்துள்ளது.

அதேபோல், அணையின் நீர்மட்டம் நேற்று காலை 62.44 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 64 அடியாக உயர்ந்தது. அதாவது, கடந்த 4 நாட்களில் 5.37 அடி வரை உயர்ந்துள்ளது. இதனால், பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும், அணையில் இருந்து பவானி ஆற்றில் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 200 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடி நீரும் என மொத்தம் வினாடிக்கு 205 அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News