வெள்ளித்திருப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு முகாம்

ஈரோடு மாவட்டம் வெள்ளித்திருப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் காச நோய் ஒழிப்பு மற்றும் புகையிலை, இளம் வயது திருமண எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம் இன்று (8ம் தேதி) நடைபெற்றது.

Update: 2024-07-08 11:15 GMT

வெள்ளித்திருப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் எடுக்கப்பட்ட படம்.

வெள்ளித்திருப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் காச நோய் ஒழிப்பு மற்றும் புகையிலை, இளம் வயது திருமண எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம் இன்று (8ம் தேதி) நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை வட்டாரம் வெள்ளித்திருப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு காச நோய் ஒழிப்பு, புகையிலை மற்றும் போதைப் பழக்க எதிர்ப்பு, வயிற்றுப்போக்கு நோய், டெங்கு தடுப்பு, இளம் வயது திருமண எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.


இந்த முகாமிற்கு, ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் காசநோய் அலுவலக மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார் தலைமை தாங்கினார். இதில், காசநோய் பரவும் விதம், காசநோய் அறிகுறிகள், காச நோய்க்கான பரிசோதனை மற்றும் சிகிச்சை முறைகள் இலவசமாக கிடைக்கும் இடங்கள், நுரையீரல் காச நோயின் பாதிப்புகள், புகையிலை பயன்பாடுகளினால் ஏற்படும் தீமைகள் மற்றும் உடல்நல பாதிப்புகள், புற்றுநோய் பாதிப்புகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

தொடர்ந்து, போதைப் பழக்கத்தால் ஏற்படும் இளைய தலைமுறையினரின் சீரழிவுகள், தீவிர இரு மாத கால வயிற்றுப்போக்கு நோய் தடுப்புத் திட்ட முகாம்களின் பயன்கள், பாதுகாப்பான குடிநீரின் அவசியம் ,வயிற்றுப்போக்கு நோய்களுக்கான காரணிகள் அதற்கான பாதுகாப்பு முறைகள், ஓ ஆர் எஸ் கரைசல் தயாரிக்கும் முறை அதன் பயன்கள்,டெங்கு காய்ச்சல் பரவும் விதம் ,கொசு உற்பத்தி தடுப்பு வழிமுறைகள், இளம் வயது திருமணத்தால் ஏற்படும் கல்வி பாதிப்புகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.


மேலும், அதனால் ஏற்படும் பெண்களின் சமூகப் பின்னடைவுகள், இளம் வயது கர்ப்பத்தால் ஏற்படும் பிரசவ கால தாய் சேய் மரணங்கள், குறைமாத பிரசவங்கள், கர்ப்பச் சிதைவுகள், ஊட்டச்சத்து இல்லா குழந்தை பிறத்தல், மக்கள் தொகை பெருக்கத்தினால் ஏற்படும் விளைவுகள், விலங்குகளால் பரவும் நோய்கள் அதற்கான பாதுகாப்பு முறைகள் குறித்து விளக்கமாக சுகாதார நலக் கல்வி வழங்கப்பட்டது.

இம்முகாமில், வட்டார மருத்துவ அலுவலர் அன்புமணி, மருத்துவ அலுவலர் சரண்யா, காசநோய் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் விஜய் சேகர், சுகாதார ஆய்வாளர்கள் சீனிவாச ரகுபதி, கதிர், ஹரிஷ், சுகாதார செவிலியர்கள், அலுவலர்கள், இருபால் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் 800 பேர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News