ஈரோட்டில் மகள்களை கொன்று தாய் தற்கொலை: தந்தைக்கு உருக்கக் கடிதம்

ஈரோட்டில் கணவனுடன் ஏற்பட்ட தகராறில், இரு மகள்களை விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2024-07-20 03:45 GMT

ஹசீனா மற்றும் அவரது 2 மகள்களை படத்தில் காணலாம்.

ஈரோட்டில் கணவனுடன் ஏற்பட்ட தகராறில், இரு மகள்களை விஷம் கொடுத்து கொன்று விட்டு தாய் தற்கொலை செய்து கொண்டார்.

ஈரோடு கருங்கல்பாளையம் பச்சையம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ஜாகீர் உசேன் (வயது 46). இவர் காலை நேரங்களில் காய்கறி விற்பனை செய்கிறார். மற்ற நேரங்களில் பேக்கரி, ஹோட்டல்களில் சமையல் வேலை, பேக்கரி உணவு பொருட்கள் தயார் செய்து கொடுத்தல் என பல வேலைகளையும் செய்து வந்தார்.

இவரது மனைவி ஹசீனா (வயது 39). இவர்களுக்கு ஆயிஷா பாத்திமா (வயது 16), ஜனாபாத்திமா (வயது 13) என 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் 11ம் வகுப்பும், 2வது மகள் 8ம் வகுப்பும் கருங்கல்பாளையத்தில் உள்ள மாநகராட்சி மகளிர் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் படித்து வந்தனர். ஜாகீர் உசேனுக்கு கடன் பிரச்னை இருந்துள்ளது. மேலும், கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி சண்டையும் ஏற்பட்டு வந்துள்ளது. 

இந்த நிலையில், வழக்கம்போல நேற்று காலை ஜாகீர் உசேன் வேலைக்கு சென்றுவிட்டார். மாலையில் அவர் தனது மனைவி ஹசீனாவுக்கு போன் செய்தபோது அவர் போனை எடுக்கவில்லை. இதையடுத்து, ஜாகீர் உசேன் பக்கத்து வீட்டினருக்கு போன் செய்து தனது மனைவியிடம் போனை எடுத்து பேச சொல்லுமாறு கூறியுள்ளார்.

அவர்கள் சென்று வீட்டில் பார்த்தபோது, கட்டிலில் 2 மகள்களும், பக்கத்து அறையில் ஹசீனா தூக்கில் தொங்கிய நிலையிலும் இருந்துள்ளனர்.  அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பக்கத்து வீட்டினர் அதுகுறித்து ஜாகீர் உசேனுக்கும், கருங்கல்பாளையம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த கருங்கல்பாளையம் போலீசார் 3 பேரின் சடலங்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து, அவர்கள் மேற்கொண்ட விசாரணையில், நேற்று காலையில் ஜாகீர் உசேன் – ஹசீனா தம்பதியினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

அதன் பின்னர், ஜாகீர் உசேன் வெளியே சென்றுவிட்டார். சண்டையால் மனமுடைந்து காணப்பட்ட ஹசீனா, 2 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து படுக்க வைத்துவிட்டு, பக்கத்து அறைக்கு சென்று அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

மேலும், தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னர், ஹசீனா மற்றும் குழந்தைகள் ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளனர். உருது மொழியில் எழுதப்பட்டிருந்த அந்தக் கடித்ததில் 2 மகள்களும், எங்கள் தந்தையை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். அவரை மது அருந்தக்கூடாது என கூறுங்கள் என்றும், வேறு சில விவரங்களும் எழுதி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். 

தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 2 மகள்களும் விஷம் கொடுத்து விட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News