அரசு மருத்துவமனை குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு: டாக்டர், நர்ஸ் போராட்டம்

அந்தியூர் அரசு மருத்துவமனை குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதால் டாக்டர்கள், நர்ஸ்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-10-06 15:00 GMT

பைல் படம்.

அந்தியூர் அரசு மருத்துவமனையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு 11 மணியளவில் ஏ ஜி. வெங்கடாசலம் எம். எல். ஏ. திடீர் ஆய்வு மேற்கொண்டு அங்கு உள்ள டாக்டர் மற்றும் செவிலியர்களிடம் நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். ஆனால் இந்த தகவலை சிலர் சமூக வலைத்தளங்களில் அந்தியூர் அரசு மருத்துவமனையில் தவறுகள் நடப்பதாக வேறு விதமாக திரித்துக் கூறி அவதூறாக கருத்துக்களை தெரிவித்து வீடியோ வெளியிட்டு இருந்தனர் .

இதனால் தான் எம்.எல்.ஏ ஆய்வு செய்ததாகவும் அதில் கூறப்பட்டு இருந்தது. இதைக் கண்டித்தும் சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டவர்கள் மீது சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இன்று அந்தியூர் அரசு மருத்துவமனை முன்பு அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் (பொறுப்பு) கவிதா தலைமையில் மருத்துவர்கள் செவிலியர்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தியூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில், மற்றும் ஏ.ஜி. வெங்கடாசலம் எம்.எல் ஏ. ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்கள், செவிலியர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்த பின்னர் டாக்டர்கள் செவிலியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு சென்றனர். இதனால் 10 மணி நிமிடம் நடந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.

Tags:    

Similar News