100% பயணிகள் அனுமதித்தால் ஈரோட்டில் தனியார் பஸ்களை இயக்க தயார்

100% பயணிகளை அரசு அனுமதித்தால் பஸ்களை இயக்க தயாராக உள்ளதாக ஈரோடு தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Update: 2021-07-10 10:15 GMT

கொரோனா தாக்கம் காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து பஸ் சேவைகள் நிறுத்தப்பட்டன. தற்போது தொற்றின் தாக்கம் குறைந்து வருவதால் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி கடந்த 5-ந் தேதி முதல் பஸ் சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டது. 50 சதவீத பயணிகளுடன் பஸ் சேவையை தொடரலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி ஈரோடு மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் முதற்கட்டமாக 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

அதேநேரம் தனியார் பஸ்கள் இன்னும் இயக்கப்படவில்லை. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 269 தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் 40 பஸ்கள் மாவட்டத்திற்கு உள்ளேயும், மீதமுள்ள பஸ்கள் சேலம், கோவை, கரூர், திருப்பூர், நாமக்கல்,பழனி போன்ற வெளி மாவட்டங்களுக்கும் இயக்கப்பட்டு வருகிறது. மற்ற ஊர்களில் ஒருசில தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஈரோடு மாவட்டத்தில் இதுவரை தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை.

இது குறித்து ஈரோடு மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் பழனிசாமி கூறியதாவது: கொரோனா தாக்கம் காரணமாக பஸ் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது மீண்டும் பஸ் இயக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 50 சதவீத பணிகளுடன் மட்டுமே பஸ் இயக்க வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.

இது எங்களுக்கு கட்டுபடியாகாது. ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை அடைந்து வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் 50 சதவீத பயணிகளுடன் பஸ்சை இயக்குவது என்பது சாத்தியமில்லை. இதனால் இப்போதைக்கு பஸ் இயக்குவது குறித்து முடிவு செய்யவில்லை. இது எங்களுக்கு மேலும் நஷ்டத்தை ஏற்படுத்தி விடும். ஒரு சில மாவட்டங்களில் பெயரளவிற்கு தனியார் பஸ்கள் இயங்கி வருகிறது. 100 சதவீத பயணிகளுடன் பஸ் சேவைக்கு அனுமதி அளித்தால் தனியார் பஸ்களை இயக்க தயாராக இருக்கிறோம் என்றார்.

Tags:    

Similar News